வன்முறைகளை தூண்டும் தமிழ் சினிமா.....

AM 6:22 Hisham Mohamed - هشام 1 Comments


தமிழ் சினிமா எதிர் காலத்தில் ரவுடி, போக்கிரி, கெட்டவன், பொல்லாதவன் போன்ற பல நல்லவர்களை உருவாக்க போகிறது.


சங்கர், மணிரத்னம் போன்றோரின் வீட்டில் அடுப்பெரிக்க முழு இந்தியாவிலும் ஏன் இலங்கையில் சில முட்டாள்கள் வாழும் இடங்களிலும் இருந்துதான் நெருப்பெடுக்க வேண்டுமா?


என்னுடைய தளத்திலும் சரி என்னுடைய ஊடகத்துறை வாழ்க்கையிலும் சரி வன்முறைகளை தூண்டும் தமிழ் சினிமாவிற்கு தெரியாமலும் நான் இடம் கொடுத்ததில்லை. கொடுக்கப்போவதுமில்லை. உயிர் கொல்லும் புற்று நோயை விட இது கொடுமையானது ஊடக்த்துறையின் தர்மம் தெரிந்தவர்களுக்கு இது நன்றாகத்தெரியும்.

அண்மைக்காலமாக நல்ல சில தமிழ் திரைப்பட கதைகள் முட்டாள்களின் தேவை உணர்ந்தும் இலாபநோக்கத்திற்காகவும் வன்முறைகள் சேர்க்கப்படுகின்றன தமிழ் சினிமாவில் அதற்கு நல்ல உதாரணம் சுப்ரமணியபுரம். எப்படி தந்திரமாக கொலை செய்வது என்று பாடம் கற்பித்தது 'நேபாளி". எந்த ஒரு நடிகரையும் இதற்கு விதிவிலக்காக சொல்ல முடியாது சூப்பர் நடிகர் முதல் தளபதிகள் தலைகள் எல்லா கலைஞானிகளும் வன்முறையெனும் சாக்கடைக்கு விளம்பரம் செய்பவர்கள்தான்.

தற்போதைய தமிழ் சினிமாவின் போக்கை யாராவது ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கிறார்களா?


இந்த கொடிய ஆட்கொல்லி கிருமியின் தாக்கத்தை இப்பொழுது தமிழகமும் தமிழர்களும் உணரப்போவதில்லை அதற்கு கொஞ்சம் காலம் தேவை ஏனென்றால் இன்னும் நிறைய கலைஞானிகள் டாக்டர் பட்டத்திற்காகவும் கலைமாமணி பட்டத்திற்காகவும் காத்திருக்கிறார்கள் பாவம் அவர்களும் விருதினை பெறு;றுக்கொள்ளட்டுமே. ஆனால் இறுதியில் எஞ்சப்போவது வன்முறை மட்டும்தான். இதற்கு நல்ல உதாரணம் வடிவேல் எதிர் விஜயகாந்த். குறித்த சவர்க்கார விளம்பரங்களில் தோன்றுபவர்கள் தங்களின் பாவனைக்கு அதை பயன்படுத்துவதில்லை(அவர்கள் குளிப்பதேயில்லை) ஆனால் கயிறு தெரிய பறந்து பறந்து அடிக்கும் விஜயகாந்தும் நகைச்சுவை நடிகரும் நிஜமான நடிகர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இது ஆட்கொல்லியின் ஆரம்பகட்டம் மட்டுமே.(மெயன் பிக்சர இன்னும் நீங்க பாக்கல) 'கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்று சொல்லி மாபெரும் தேசத்தின் சுதந்திரப் போரே அமைதியான வழியில் அன்று ஒரு முடிவுக்கு வந்தது அந்த அஹிம்சாவாதியின் திருமுயற்சியால். ஆனால் இன்று அதே தேசத்திலே, கத்தியின்றி இரத்தமின்றி சினிமாப் படம் வெளிவருவதில்லை.
தற்போது வெளிவரும் பெரும்பான்மையான தமிழ்த் திரைப்படங்களில் 'அரிவாள்'தான் அதிகாரப்பூர்வமற்ற கதாநாயகன். படம் ஆரம்பிக்கும்போதே, கொலைக்காரக் கும்பல் ஒன்று அரிவாளோடு யாரையோ இருட்டில் துரத்துவது போலவும், இடையிடையே பன்றிக்கூட்டங்கள் பயந்து ஒதுங்குவது போலவும் காட்டி நம்மை மிரட்சியடையச் செய்து, ஓடிக்கொண்டிருக்கும் உதிரத்தை ஒரு நொடியிலேயே உறையச் செய்துவிடுகிறார்கள். மனிதனைக் கத்தியால் குத்துவதை அப்படியே ஒளிவு மறைவின்றி பச்சை பச்சையாகக் காட்டுகிறார்கள். காட்சிக்குச் காட்சி பச்சை இரத்தம் பரிமாறுகிறார்கள்.


வெள்ளை மனம்' கொண்ட அந்தக் கிராமத்தவர்களை, ஏதோ நித்தம் நித்தம் இரத்தத்திலே ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பவர்களாகச் சித்தரிக்கும் காட்சிகள் நியாயமா?


ஹீரோவும், ஹீரோயினும் தங்களின் பால்ய வயதிலேயே ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்பதைக் காட்டுவதற்காக, கடலை பிடுங்கி சாப்பிடுவது, பம்பரம் விடுவது போன்ற என்றுமே நெஞ்சில் இனிக்கும் காட்சிகளைக் காட்டி சிறியவர், பெரியவர் என எல்லோரையும் கவர்ந்து இழுத்து அமரவைத்து, தடாலடியாக கத்திக் குத்துக் காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். எண்ணற்ற படங்களில் அதன் உக்கிரக் காட்சிகளில் எல்லாம் வக்கிரம் தொனிக்கிறது.

வன்முறைக்காவியத்திற்கு விருதுகளை அள்ளிக்கொடுப்பது சரியா?

கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் மல்லாந்து கிடக்கும் கதாநாயகியை, 4 பேர் மாறி மாறிக் கற்பழிக்கும் காட்சியை (படம்: பருத்தி வீரன்) முழுவதுமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்களே, எப்படித்தான் நாமெல்லாம் அதைக் கண்விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ? இது வன்முறைக்குத் துணை போவதாகாதா? ஒரு படத்தைவிட மறு படத்தில் அதிகமான வன்முறை இருக்கவேண்டும் என்று இயக்குநர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு விதியை வகுத்துக்கொண்டு செயல்படுவதுபோல் தெரிகிறது. 'ரொம்ப நல்ல படம்' என்று விமர்சிக்கப்பட்ட 'வெயில்' படமும் இந்த வன்முறையின் வக்கிரத்திலிருந்து தன்னை விலக்கி நிறுத்திக் கொள்ளவில்லை. இப்படி எத்தனையோ சமீபத்திய படங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். பதிவு செய்ய இடம்தான் போதாது!

சினிமா ஒரு பொழுதுபோக்காம். அடுத்தவனைப் 'போட்டுத் தள்ளுவது' எப்படி என்று வெள்ளித் திரையிலே மணிக்கணக்கில் போட்டுக் காட்டுகிறார்களே, அதைப் பச்சைக் குழந்தைகளைப் பக்கத்திலே வைத்துக்கொண்டு குடும்பத்தோடு அமர்ந்து பார்த்துவிட்டு, அங்கே திரையிலே பரிமாறப்படும் அந்தப் பச்சை இரத்தத்தை நாமும் பருகிவிட்டு அந்தப் பச்சைக் குழந்தைகளுக்கும் ஊட்டிவிட்டு வருகிறோமே, அதுதான் பொழுதுபோக்கா?
சினிமா எடுப்பவர்களைவிட அதனைப் பார்ப்பவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். இரத்தக் கறை படிந்த இதுபோன்ற படங்களையே பார்த்துவிட்டு, ஒன்றுக்குமே உதவாத சில மசாலாப் படங்களைப் பார்க்கும்போது, 'அப்பாடா... இது பரவாயில்லை' என்று தோன்றுகிறது. ஆதலால் படைப்பாளிகளே, நீங்கள் ஒன்றும் கருத்துச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை 'வன்முறை' இருக்கக்கூடாது என்று ஒரு 'வரைமுறை'யை ஏற்படுத்திக்கொண்டு படம் எடுங்கள்! இப்போதைக்கு அது போதும்.

1 COMMENTS:

சேவியர் சொன்னது…

//அண்மைக்காலமாக நல்ல சில தமிழ் திரைப்பட கதைகள் முட்டாள்களின் தேவை உணர்ந்தும் இலாபநோக்கத்திற்காகவும் வன்முறைகள் சேர்க்கப்படுகின்றன தமிழ் சினிமாவில் அதற்கு நல்ல உதாரணம் சுப்ரமணியபுரம்.//

நச் !!!!