பல்வேறு கலாச்சாரங்கள் உலக நாடுகளில் அவ்வப்போது தலை தூக்கினாலும் அம்மா என்கிற அந்தஸ்தும் பாசமும் பெருகி வரும் கலாச்சாரங்களால் வெற்றி கொள்ள முடியாதவை.
ஒரு குழந்தையை பெற்றெடுத்ததற்காய் அவள் படுகிற வேதனைகளும் வலிகளும் வார்த்தைகளுக்கப்பாற்பட்டவை.
குறைந்த உதவிகளோடும் அதிக வலிகள் அழுத்தங்களோடும் தனித்து நின்று போராடுகிற மனவலிமை நீங்கள்தானம்மா.
ரேகைகள் தேயும் வரை உன்னைப்போல் யாரால் உழைக்க முடியும். அதற்காகவோ என்னவோ உன் பாதங்களின் கீழ் சுவர்க்கம் என்றார் நபிகள் நாயகம்.
ஆண்களை விட தாய்மார் சராசரியாக தம் ஆயுட் காலம் முழுதும் 2.5 தடவைகள் அதிகமாக வலிகளை அனுபவிக்கிறார்கள் கடந்த வாரம் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிலரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு சொல்லும் உண்மை இது. இந்த வலிகள் எப்பொழுதும் அவளுக்கு வேதனையாக இருந்ததில்லை.
ஒரு தாயின் உழைப்புதான் குழந்தையின் எதிர்காலம் என்கிறார் பிரென்சுப் புரட்சியின் தளபதி நெப்போலியன் பொனபாட். ஆப்ராகாம் லிங்கனும் தன் தாய் மீது அதிக பாசம் கொண்டவர் அவர் அடிக்கடி சொல்லும் ஒரு விடயம் 'என் தாயின் பிரார்த்தனைகள் என்னை பின் தொடர்கின்றன அவை என் வாழ்வோடு பயணிக்கின்றன.
ஒரு மனிதனின் வெற்றிக்கு பெற்றோரின் பங்களிப்பு அளப்பரியது. சில சமயம் அவை மறைமுகமாக கிடைப்பதுமுண்டு. பொதுவாக ஜீன்கள்தான் மனித இயல்புகளை நிர்ணயிக்கின்றன. தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் சம அளவு ஜீன்களை ஒரு மனிதன் பெற்றாலும் தாயின் ஜீன்கள்தான் செல்வாக்கு செலுத்துகின்றன. கர்ப காலத்தில் அவளது செயற்பாடுகள் உணவு பழக்க முறையோடு சிறுபராயத்தில் அவள் விரும்பிய உணவுவகைகள் போன்ற பல விடயங்கள் ஜீன்களின் பரிமாற்றத்தால் அவள் குழந்தையும் அதை உணர்கிறது.
சின்ஹா என்கிற ஒருவர் தன் சிறுபராயத்து நிகழ்வொன்றை mothersdayworld என்கிற தளத்தில் பதிந்திருந்தார்."சிறுவயதில் என் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் என் நண்பருக்கும் எனக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் சண்டையில் பொய் முடிந்தது. என் நண்பன் என் மீது ஒரு சிறிய கல்லை வீசி எறிந்தான் அது என் வலது கண்ணுக்கு கீழ் சிறிய காயத்தை எற்படுத்தியது. ஆத்திரத்தில் அவன் முகத்தில் நான் குத்தியதில் அவன் கண்ணாடி நொருங்கியது. வேகமாக வீட்டுக்கு விரைந்தவன் தன் பெற்றோரிடம் என் மீது குற்றம் சொல்லிவிட்டான். பக்கத்து பக்கத்து வீடு என்பதால் என்ன நடக்குமோ அம்மா என்ன சொல்லுவாங்களோ என்கிற அச்சத்தோடு வீட்டுக்குள் நுழைந்தேன். என்னை நோக்கி ஓடி வந்த என் அம்மா எனக்கு எங்கேனும் அடிபட்டிருக்கிறதா என்பதை மட்டும்தான் பார்த்தாலே தவிர வேறு எதையும் கேட்கவில்லை. நடந்தவற்றை அம்மாவிடம் சொன்னேன். அதற்கு அம்மா சொன்ன பதில் என் புள்ள தப்பு பண்ண மாட்டான்னு எனக்கு தெரியும்." அன்று அவள் கொடுத்த தன்னம்பிக்கை தான் இன்றும் தன்னை ஒரு நல்ல மனிதராக வாழ வைத்திருக்கிறது என்கிறார் சின்ஹா.
பரபரப்பான இந்த யுகத்தில் தாய்க்கும் கொஞசம் ஓய்வு தேவை. தாய்மாரின் அன்றாட வாழ்நாளில் ஓய்வுக்கு கிடைப்பது ஆண்களை விட குறைந்த நேரம்தான். நாளொன்றுக்கு அமெரிக்க ஆண்கள் தாய்மாரை விட 40 நிமிடம் ஓய்வெடுக்கிறார்கள். இதுவே இத்தாலி ஆண்கள் 80 நிமிடம் ஓய்வெடுக்கிறார்கள். இன்று அன்னையர் தினம் நாம் எம் தாய்க்கு என்ன செய்யப்போகிறோம்.
பசி தூக்கம் ஓய்வு இல்லாத உன் அகராதியில் உனக்கான தினத்திலும் நீ ஓய்வெடுக்கப்போவதில்லை. அம்மா உன்னிடம் நான் கற்றுக்கொண்டது எராளம். என்னுடைய ஒவ்வொரு உயர்விலும் என்னை தாங்கி நிற்கிறாய். ஒவ்வொரு சரிவிலும் என்னை தட்டிக்கொடுக்கிறாய்.
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்.
என்றென்றும் நீ நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்.

ஒரு ஏழைச்சிறுவன் பாடசாலை செல்வதற்காய் வீடு வீடாக தன் தாய் தயாரித்து தரும் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தான். விற்பனை நிறைவுக்கட்டத்தில் பசி அவன் வயிற்றை கிள்ளியது.
எதிரே தென்பட்ட வீட்டில் பசிக்கு ஏதேனும் உணவு கேட்க நினைத்து கதவை தட்டியவன் உணர்விழந்து போனான். அங்கே ஒரு அழகான பெண் கதவை திறந்து நின்றுகொண்டிருந்தாள். பசிக்கு உணவு கேட்க வந்தவன் தடுமாறி கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமான்னு கேட்டான். வந்தவன் பசியால் வாடியிருந்ததை உணர்ந்தவள் ஒரு பெரிய பாத்திரத்தில் பால் கொடுத்தாள். நிதானமாக குடித்து முடித்தவன்.
''நீங்கள் செய்த உதவிக்கு நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்'' என்றான்.
அதற்கு அந்த கிராமத்து பெண் '' நீங்கள் எனக்கு கடன் பட வேண்டியதில்லை. எப்பொழுதும் கருணைக்கு சம்பளம் பெறக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க'' என்று பதில் சொன்னாள்.
''அப்போ என்னுடைய இதயப்பூர்வமான நன்றியையாவது ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டான்.
தொடந்த அந்த ஏழைச்சிறுவனின் கடின உழைப்பும் படிப்பும் ஒரு பெரிய நகரத்தில் பிரபல வைத்தியர் என்கிற அந்தஸ்தை அவனுக்கு கொடுத்தது.
ஒரு சில வருடங்களுக்கு பிறகு. அந்த கிராமத்து பெண் சுகவீனமுற்றாள். கடும் முயற்சிக்கு பிறகு கிராமத்து வைத்தியர்கள் சிகிச்சையளிப்பதை கைவிட்டுவிட்டனர். அரிய வகை நோயக்கு தகுந்த சிகிச்சையை நகரத்தில் தேர்ந்த ஒரு வைத்தியரிடம் பெற்றுக்கொள்ளுமாறு அவள் அறிவுறுத்தப்பட்டாள்.
அவசரமாக நகரத்தின் பிரபல வைத்தியரிடம் அழைத்துச்செல்லப்பட்டாள் அந்த பெண்.
உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒரு நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாய் குறித்த வைத்தியருக்கு தகவல் சொல்லப்பட்டது. நோயளியின் முகவரியை பார்த்தவர் சிகிச்சைக்காக விரைந்தார்.
தன் பசிக்கு பாத்திரம் நிரம்ப பால் கொடுத்த அந்த கிராமத்து பெண்தான் அவள் என்பதை பார்த்த பார்வையில் உணர்ந்து கொண்டார். அவளை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு பல நாட்களாக கடுமையாக போரடிய வைத்தியர் வெற்றிபெற்றார்.
இறுதியாக அந்த பெண்ணின் சிகிச்சைகளுக்கான செலவுப்பட்டியல் வைத்தியரின் அனுமதிக்காக வந்தது. அதைப்பார்த்தவர் அந்தப்பட்டடியலின் அடியில் ஏதோ எழுதி கையொப்பமிட்டு அனுப்பி வைத்தார்.
கிராமத்து பெண்ணிடம் அந்த பட்டியல் கொடுக்கப்பட்டது. '' என் வாழ் நாள் முழுவதும் உழைத்தாலும் இதை என்னால் கட்ட முடியாது'' என்று தனக்குள்ளே நினைத்துக்கொண்டு அதை திறந்தாள்.
அவள் கண்ணில் முதலில் பட்டது அந்த பட்டியலின் அடிப்பகுதியில் வைத்தியரின் கையொப்பத்துடன் அடிக்கோடிட்டு எழுதப்பட்ட அந்த சொற்கள்தான்.
''முழுமையாக செலுத்துங்கள், ஒரு பாத்திரம் நிரம்ப பாலை ஊற்றி''
சந்தோசம் அவள் கண்களை மூழ்கடிக்க தெளிவான இதயத்தோடு ''நன்றி இறைவா, உன் அன்பை மனித மனங்களில் பரப்பச்செய்'' என்று வேண்டிக்கொண்டாள்.
சுவரை நோக்கி வீசிய பந்து மீண்டும் நம்மை வந்தடைவது போல நாம் செய்யும் எல்லா நல்ல செயல்களுக்கும் என்றோ ஒரு நாள் பலனை பெறுவோம். பலன் கிடைக்காவிட்டால் உலகை அழகுபடுத்தியதற்காய சந்தோசப்படுவோம்.
இந்த உலகை அன்பு மட்டும் ஆளட்டும். கொடிய யுத்தமில்லாத உலகிற்காய் பிரார்த்திப்போம்.
விரோதி புதுவருடத்தை கொண்டாடுபவர்களுக்கு என் புத்தாண்டு வாழ்தத்துக்கள்.

சில சமயம் நாம் வாசிக்கும் விடயங்கள் நம்மை சிந்திக்க வைப்பதுண்டு... அதை நம் இதயத்தில் இருக்கும் பலரோடும் பகிர்ந்து கொள்ளவும் நாம் மறப்பதில்லை... அதுபோல நம் இதயத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு காதல் கதை...
கண் தெரியாத ஒருத்தி தன் வாழ்க்கையை வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தாள். அவள் வெறுக்காதவை எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை.
அவள் இந்த உலகத்தில் அன்பு வைத்தது தன் காதலனிடம் மட்டும்தான். அவன் எப்போதும் அவளுக்காகவே வாழ்கிறவன். அவன் விடுகிற ஒவ்வோரு மூச்சும் இவள் பற்றிய சிந்தனையாகத்தான் இருக்கும்.
ஒரு நாள் பார்வையிழந்த அந்த பெண் தன் காதலினிடம் ''எனக்கு மட்டும் பார்வை இருக்குமென்றால் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்'' என்றாள்.
பல நாட்கள் கடந்த இந்த காதல் பயணத்தில் ஒரு முறை யாரோ ஒருத்தர் இவள் பார்வைக்கு கண்களை தானமாக கொடுத்திருந்தார்.
இப்பொழுது அவள் இந்த உலகத்தையே பார்க்கிறாள். அவள் இதயக்கூட்டில் இருக்கும் காதலனை தன் இரு கண் கொண்டு பார்க்கிறாள்.
இந்த உலகத்தை விட தன்னை நேசித்த காதலியிடம் காதலன் ''இப்போ உனக்கு பார்வை வந்துடுச்சி என்னை கல்யாணம் கட்டிக்கிறியா'' என்று கேட்கிறான். திடுக்கிட்டுப்போன காதலி ''கண் தெரியாத உன்னை நான் கல்யாணம் கட்டுவதா? எப்படி சாத்தியப்படும்? '' என்று கோபத்தோடு பதில் சொன்னாள்.
நொறுங்கிய இதயத்தோடு அவன் எழுதிய கடிதத்தின் அடியில்...
''உனக்குள் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிற சந்தோசத்தோடு விடை பெறுகிறேன். என் கண்களையாவது கவனமாகப்பார்த்துக்கொள்.''
வாழ்க்கையின் படிநிலைகள் மாறி உயர்வு பெறும் போது மனித மனங்களும் மாறுவதில்லையா?
எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறோம் கடந்த பாதையை?
வருத்தங்களில் எம் கண்ணீர் துடைத்த கைக்குட்டைகள் எங்கே?
(இப்போது இவளை உலகம் தெரியாதவள் அல்லது கண் தெரியாதவள் என்பதை விட குருடி என்றழைப்பது பொருத்தமென்று ராமசாமி அண்ணே சொல்லச்சொன்னாரு.)