எரிந்தது வெற்றி FM இன் செய்திப்பிரிவு

PM 11:20 Hisham Mohamed - هشام 11 Comments


நண்பனிடம் சொல்லுங்கள் நிகழ்ச்சி முடிந்து போகும் போது இரவு 11.30இற்கு நான் பார்த்த எமது அலுவலகம் இரண்டு மணித்தியாலங்கள் கழித்து கரும் புகைமூட்டத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டது.

அலுவலக காவலாளி நெற்றி வடிய ரத்தத்தோடு நின்றுகொண்டிருந்தார். காயங்களின் வலி மறந்து தீயை அணைக்க போராடிக்கொண்டிருந்த செய்திப்பிரிவின் நண்பர்கள் இருவரோடு இன்னும் சிலரும் பாடுபட்டுக்கொண்டிருந்த நேரம் தீயணைப்பு படையினர்; வந்து சேர்ந்தனர்.



10இற்கும் மேற்பட்ட காடையர்கள் குழு அதிகாலை 1.20 அளவில் எமது செய்திப்பிரிவின் இருவரை மண்டியிடச்செய்து வைத்திருந்த துப்பாக்கிகளாலும் ஆயுதங்களாலும் தாக்கிவிட்டு பெட்ரோல் குண்டுகளை பயன்படுத்தி தீயிட்டுள்ளனர்.

பல மணிநேர போரட்டத்தின் பின்னர் தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்போது செய்திப்பிரிவு கருகிப்போயிருந்தது.


Voice of Asia Network Pvt. Ltd நிறுவனத்தின் அங்கமாக செயற்படுகிற சியத, ரியல், வெற்றி வானொலிகளும் முற்றுமுழுதாக செயலிழந்து போயிருக்கும் எமது செய்திப்பிரிவும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் நம்பிக்கையோடும் எம் அன்பு நேயர்களின் ஆதரவோடும் இன்னும் பல மடங்கு பலத்துடன் வரும்.


காடையர்களாலும் அவர்கள் கொளுத்தும் தீயினாலும் உயிர்காவும் ஆயதங்களாலும் சத்தியத்தை புதைத்துவிடத்தான் முடியுமா?


அவசர நேரத்தில் ஆறுதலாய் இருந்த நேயர்கள், சக ஊடக நண்பர்கள் என்றும் எம் ஞாபகத்தில் நிற்பார்கள்...

எம் பயணத்தில் பதியப்பட்ட நாளின் படங்கள் சில...







தயவு செஞ்சு க்ளிக் பன்னிடாதீங்க!

PM 10:44 Hisham Mohamed - هشام 10 Comments

ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்காதான் நான் பதிவெழுதுவேன்.
உண்மையாக இது என் வலைபூதானா? என் பக்கத்துக்கு நான் வந்தே மாதக்கணக்காகிறது. அதுதான் இப்படியொரு சந்தேகம் எனக்கு.

இவங்கெல்லாம் என்னை மறந்திருப்பாங்களோன்னு நினைச்சிகிட்டிருந்த நண்பர்கள் நிறையபேர் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போதுதான் தெரிஞ்சுது அவங்க பளோ பன்னிகிட்டுதான் இருக்காங்கன்னு. முக்கால்வாசி பேர் கேட்டது ஏன் பதிவெழுதுறதில்லன்னு.(அதனால ஒரு மினி பதிவு)

கடைசியாக நான் இட்ட பதிவு மக்கள் தலைவன் தோன்றும் காலம். கிட்டதட்ட நானும் ஒரு அரசியல்வாதியாகிட்டேன். ''நண்பர்கள் மன்னிக்கனும்னு"" பதிவெழுதுறதும் தொடர்ந்து அஞ்சாறு பதிவெழுதுறதும் மாதக்கணக்குல காணாமல் போறதும் இயல்பாகிடிச்சில்ல.(அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. இப்ப பதிவுலகமும் அரசியல் நடத்துது..)

அவ்வப்போது நடக்கிற சுவாரஷ்யங்களை பதியனும்னு நினைப்பேன் பிறகு மறந்துடுவேன். எல்லாத்தையும் தூக்கி சாப்பிடும் என்னோட சோம்பேறித்தனம். எல்லாத்துலயும் இல்ல டைப்பன்றதுல ம்ம்ஹ்... இன்னும் சில விசயங்கள்ல அத பிறகு பட்டியல் போட்றன். கடந்த மாதங்கள் உழைப்போடும் கொஞ்சம் (நிறைய)ஓய்வாக இருந்தது அதிகம் என்பதால் மிஞ்சியது செல்ல தொப்பைதான். இப்போ குறைக்கிறதுக்;காக ஓடிக்கிட்டிருக்கேன்.(அதுவும் ரெண்டு நாள்தான்)

35ஆவது(நண்பர்கள் சிலரின் திருப்திக்காக) பிறந்த நாளில் வாய் நிறைய வாழ்த்து சொன்ன உறவுகளுக்கு நன்றிகள் கோடி.

வெற்றி வானொலியில் நான் தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி பற்றிய உணர்வுகளுடனும் இன்னும் சில கப்சிப்களுடனும் சந்திப்போம்.




மக்களின் தலைவன் தோன்றும் காலம்! தவறவிடாதீர்கள்.

PM 9:33 Hisham Mohamed - هشام 4 Comments





தவறவிட்டால் இன்னும் 6 வருடங்களின் பின் தான் தரிசனம் தருவார்.
உங்களில் ஒருவன். ஏழைகளின் தோழன், வறியவர்களின் சொந்தக்காரன் எல்லாவற்றையும் தாண்டி இம்முறை ஒரு வாசகம் கேட்டேன். மக்கள் மத்தியில் தோன்றும் தெய்வம்.(டுப்பாகூரு ராமசாமி அண்ணே சொன்னாரு).

ஏப்ரல் எட்டாம் திகதிக்கு பிறகு தெய்வங்களும் தோழர்களும் தரிசனம் தருவார்களா?

எந்திரன்ல ஒரு சூப்பர் பஞ்ச் இருக்காம் '' வாழ்க்கை கொடுக்கிறவன் வாக்காளன் வாய்கரிசி போட்றவன் வேட்பாளன்'' எப்படி இப்படி சொல்லலாம்? சூப்பர் ஸ்டாரு..... நல்லா இல்ல! நம்ம ஊர்ல எல்லாம் அப்டி இல்ல தெரியுமா....!

இப்படித்தான் நம்ம ஊர்ல ரொம்ப நாளைக்கு பிறகு 'ஸாரி பாஸ்' வருடத்துக்கு பிறகு ஒரு தெய்வத்தை பாத்துட்டு தம்பி அப்பிடியே செவப்பா கலரா இருக்கீங்கன்னு சொன்னாங்களாம். ''எப்பத்தான் திருந்தப்போறிங்களோ'' நானில்லை ராமசாமி அண்ணே உங்ககிட்ட கேட்டுட்டு அப்புறாம சொல்ல சொன்னாரு.




அப்புறம் நான் நினைச்சு நினைச்சு சிரிக்கிற இந்த திருவிழா காலத்து காமெடி ஒன்னு நீங்களும் சிரிக்கலாம்.

ஒரு கட்சித்தலைவர் பிரசாரக்கூட்டத்தில் சொல்றார்.

''என்ன செஞ்சிட்டாங்க பெருசா?

மேம்பாலம் கட்டியிருக்காங்க.. பெரிய பாலம் கட்டியிருக்காங்க..

என்ன நடக்குது...

அம்மாமார் பாலத்திலிருந்து குழந்தையை களுகங்கையில போடுறாங்க..''

கடைசியா அடுத்தவாட்டி நீங்களும் களத்துல நிற்கிறதா இருந்தா சின்னதா ஒரு எட்வைஸ் பெருசா தரலாம்.

முதல்ல ஒரு நல்ல பாட்டு தெரிவுசெய்து கொள்ளுங்கோ
விஜய் பட பாட்டாக இருந்தா ரொம்ப நல்லது உதவிக்கு ரெண்டு பாட்டு சொல்றேன் ''அர்ஜுனரு வில்லு'', ''நீ எந்த ஊரு நா எந்த ஊரு''
அடுத்து ஒரு பெரிய படிக்கட்டுல இருந்து வேகமா நடந்து வாங்கோ(கவனம் எங்கயும் விழுந்திடாதீங்க)
நாலு பேரு கூட்டி வைச்சு சும்மா கை நீட்டி ஏதாவது முக்கியமா சொல்லுற மாதிரி ரியாக்ஷன் கொடுங்க. யாரோடையாவது காரை கடனா வாங்கி பந்தாவா ஏறுங்க.
அம்புட்டயும் கெமராவில பதிவு செய்து கடைசியா ஒரு வாசகம் வைத்துக்கொள்ளுங்க. (உதவிக்குறிப்பு - உலகத்தலைவன்)

முக்கியமான ஒரு விசயம் திருவிழாவுக்கு நாலு மசத்துக்கு முதல்லயும் தொடங்கலாம். செலவில்லாம ஆடு அல்லது மாடு தையல் இயந்திரம் போன்றவற்றை ஒரு ரெண்டு மூணு பேருக்கு கொடுத்துட்டு அப்படியே போஸ் கொடுத்து பேப்பர்ல போடுங்க. குடும்பதுல அல்லது தெரிஞ்சவங்களா தெரிவு செய்தால் திருப்பி வாங்கி இன்னும் ரெண்டு மூணு பேருக்கு கொடுக்கலாம்.

நான் பொழுது போகலயேன்னு சும்மாதான் எழுதினேன். ஏதும் சீரியஸா எடுத்துக்காதீங்கோ.
'ஸாரி பாஸ்'

படைத்தவனையா சந்தேகப்படுவது?

PM 3:13 Hisham Mohamed - هشام 6 Comments



யாரையும் எந்த அமைப்பையும் புண்படுத்துவதற்காக எழுதும் பதிவல்ல,
இது அன்புள்ள நண்பனுக்காக,

மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்தவே. எந்த மதமாக இருந்தாலும் அத்தனையும் சொல்கிற ஒரு உண்மை இறைவன் ஒருவன் என்பதே. அவன் தேவையற்றவன், உலகத்தை படைத்தான் மனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்தான். பகுத்தறிவை கொடுத்தவனையே சமூதாயம் சந்தேகத்தோடு ஆராயத்தொடங்கிவிட்டது.

ஒரு நல்ல நண்பனின் அறியாமையை அறிய விளையும் பயணத்தில் அவனை சந்திந்தபோது வந்தது இந்த பதிவு. வாடா என்று விழிக்கும் அளவுக்கு நெருங்கிய நண்பன். அவன் கொள்கைகளுக்கு நான் என்றும் உடன் பட்டதில்லை. வழக்கமாக நாம் ஞாயிற்றுகிழமைகளில் சந்தித்து அரட்டையடிப்பதுண்டு. நல்ல ஒரு புத்தகப் பிரியன், புத்தகங்களுக்குள்ளே தன்னை தொலைத்துவிடுவான். இன்னைக்கு தெரியாம ஒரு புத்தகம் தா வாசிச்சிட்டு தாரேன்னு கேட்டேன். அவன் புத்தகங்களை காட்டிய பிறகு கேட்டதற்காக வருத்தப்பட்டுக்கொண்டேன். அவன் காட்டிய புத்தகங்களில் ஒன்று ''குருவைத்தேடு'' மற்றயது ''கடவுளை நம்பலாமா வேண்டாமா''

கடவுள் இல்லை என்று சொல்பவர்களில் இவனும் ஒருவன். இப்படிப்பட்டவர்கள் பல வழிகளில் செல்வார்கள். கடவுள் இல்லை என்று ஆராய்ச்சி செய்பவர்கள் ஒரு வகை. இருந்தா என்ன இல்லைன்னா என்ன என்று இருப்பவர்கள் சிலர். ஒரு விஷயம் சொல்லுவாங்க கடவுள் இல்லை என்கிறவனையும் நம்பலாம் இருக்குங்கிறவனையும் நம்பலாம் நான்தான் கடவுள்னு சொல்றானே அவனை நம்பவே கூடாதும்பாங்க. ஆனால் என்ன பொறுத்தவரையில இல்லைங்கிறவனையும் நம்ப கூடாது நான்தான கடவுள்ங்கிறவனையும் நம்ப கூடாது. மதங்கள் வழிகாட்ட வந்தவைன்னு சொல்றோம் அப்போ அதை மறுக்கிறவர்கள் வழிகேட்டில்தானே இருக்கனும்.

அறிவு ஆற்றல் ஆசை இவை ஒரு எல்லையை கடக்கும்போது முக்தி கிடைக்குமா முட்டாள் என்கிற பட்டம் கிடைக்குமா?
இறைவனின் அற்புதமான படைப்புகளை ரசிக்கலாம் அதை ஆராயலாம். அவனையே சந்தேகக்கண் கொண்டு ஆராயலாமா?
இந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் இறைவனை முழுமையாக நம்புகிறேன்.


மத ரீதியானதல்ல ஒரு நல்ல பயிற்சி வகுப்பு இருக்கு வா என்று அண்மையில் வற்புறுத்தி அழைத்தான் மறுக்காமல் சென்றிருந்தேன். (அமைப்புகளையும் தங்களை தூதுவர்கள் என்று அழைத்துக்கொள்பவர்களையும் நான் நம்புவதில்லை)

600ரூபாய் கொடுத்து அப்ளிகேசன் நிரப்பிவிட்டு அமர்ந்து கொண்டோம். கோடை காலத்தில் எங்களை பாதுகாத்து கொள்வதற்கும் கவலைகளை குறைப்பதற்குமான வழிகளையும் சொல்லித்தர தொடங்கினார் குரு.
அந்த இரண்டு நாளின் அனுபவங்கள் சின்னதாய் சில விடயங்களை தந்தது. (வட போச்சேன்னு நினைக்கவும் வைச்சுது)

மப்பும் மந்தாரமுமான ஒரு மாலைப்பொழுது நானும் என் இரு நண்பர்களும் உள்ளே அமர்ந்து கொண்டோம். அதுல ஒருத்தர் நாத்திகர் மற்றவர் ஆத்திகர். ஒரு அழகான இடம், அந்த வீடு கட்டப்பட்டவிதமும் மனசுக்கு ஒரு அமைதியை தந்தது. இன்னும் பத்துபேர் வந்திருந்தாங்க.(அதனால கவலை இல்ல)

வசீகரமான ஒரு பேச்சும் ஒருவரின் மனதை வெல்லும் ஆற்றலும் பாடம் சொல்லித்தந்ந வெளிநாட்டவரிடம் நான் பார்த்தேன். மூச்சு பயிற்சியோட வகுப்பு தொடங்கியது. அது யோகா கலையின் அடிப்படையான சில முறைகள் இப்போ கூட செய்து பார்கிறேன் நல்லாதான் இருக்கு.

அடுத்து ரொம்ப இக்கட்டான ஒரு கட்டம், சிரிப்பு பயிற்சி சொல்லும்போதே அழைத்து வந்த என் நண்பனை ஒரு மாதிரி பார்த்தேன். வாய் விட்டு சிரிக்கச் சொன்னார் பரவாயில்லை சிரிச்சேன் அப்புறம் விவதாம் செஞ்சிகிட்டே சிரிங்கன்னாரு என்ன பன்ன வந்துட்டோமேன்னு சிரிச்சேன். அதுக்கு மேல முடியல விவதாம் செஞ்சிகிட்டே பக்கத்துல இருக்கவரோட சிரிக்கச்சொன்னார். என் பக்கத்துல அவன்தான் இருந்தான். சிரிச்சிக்கிட்டே சொன்னேன் 'வெளியில வாடா...'ன்னு. அப்புறம் ஏன் கேட்கிறீங்க சிங்கம் மாதிரி பூனை மாதிரி மில்க் சேக் பண்ற மாதிரி எப்படியெல்லாம் சிரிக்க முடியுமோ அவ்ளவும் பண்ணியாச்சு.

முடிச்சதும் சொன்னாரு ஒரு விடயம் சூப்பரா இருந்தது. அது நம்ம மனச ஏமாத்துற ஒரு வழி நீங்க கூட பண்ணலாம்.

சிரிக்கிறது உண்மையாவும் செய்யலாம் பொய்யாவும் செய்யலாம் அது மனசுக்கு தெரியாது உண்மையா பொய்யான்னு. எப்படி சிரிச்சாலும் உடம்பை புத்துணர்வடையச்செய்யும் ஹர்மோன் சுரக்கும் என்றார்.

காலையில எழும்பும்போதும் இரவு தூங்கும் போதும் சிரிச்சிகிட்டே இருங்கன்னாரு. அப்போ ஒருத்தர் 'யாராவது முட்டாள்னு சொல்லிட்டான்னு' ஒரு முக்கியமான கேள்வி கேட்டாரு. 'ஆமா நான் முட்டாள்தான்னு' சொல்லிட்டு நீங்க சிரிங்கன்னு ஈஸியா பதில் சொன்னார் அவர்.

அடுத்து கோடை காலத்தை சமாளிக்கிற பயிற்சி அது சொல்ல முடியாது. (அதுக்கு எனக்கிட்ட ஒ அப்ளிகேசன் இருக்கு... ஹி ஹி)

முதலாவது நாள் முடிய இரண்டாவது நாள் புதுசா ஏதாவது இருக்கும்னு நினைச்சேன் அதே படம்தான் ஸாரி பாடம்தான். அதுல நடந்த மேட்டரோட முடிச்சுகிறேன். கால்களை நீட்டி படுத்தபடி தான் சொல்வதை செய்யச்சொன்னாரு (முதல் நாளும் இது நடந்தது அனால் ஒரு பத்து நிமிடம்தான்) கண்களை மூடிக்கொண்டு ஒரு அரை மணிநேரம் படுத்தபடி பயிற்சியின் நிறைவில் மெதுவாக அமர்ந்து கண்களை மெதுவாக திறக்கச்சொன்னார். எல்லாரும் எழும்பிட்டாங்க என் பக்கத்துல இருந்த ஒருத்தர் தூங்கிட்டாரு (ஐயோ ஐயோ!)

மூனாவது நாள் பக்கமும் போகல. ஒரு சில நல்ல விடயங்களை படித்தேன் ஆனால் சரியான ஒரு பாடநெறியுடன் நடத்தப்பட்டால் வரவேற்கப்படும்னு நினைக்கிறேன்.

எப்படியோ இதுக்குபிறகு கூப்பிட மாட்டான்னு ஒரு சந்தோசம். உன்னிடம் இருக்கும் சொல்வளத்தை கண்டு நான் பிரமித்துப்போயிருக்கிறேன். ஒரு நல்ல நண்பனாக உனக்கு சொல்லக்கூடியது உன் தேடல்களின் திசையை மாற்று, வாழ்க்கையை நெறிமுறைகளோடு ரசிக்க பழகு அமைதி கிடைக்கும். காசு கொடுத்து சிரிக்க பழக வேண்டி இருக்காது.

இனிமேல் 600ரூபாய் கொடுத்து சிரிக்க கூப்பிட்டா மவனே!...

விண்ணைத்தாண்டி வருவாயா - என்னை அடிச்சுது இந்த காதல்.

PM 5:03 Hisham Mohamed - هشام 8 Comments

இந்த ஆண்டில்(2010) நான் எழுதும் முதல் பதிவு. திரைப்படத்துக்காக நான் எழுதும் முதல் விமர்சனம். அதை விட பதிவுலகில் காணமல் போய் இரண்டு மாதங்களுக்கு பிறகு என் முகவரி தேடி வருகிறேன்.

சகா லோஷனின் சுகயீனத்திற்கு நன்றி சொல்லி படம் பார்க்க வேண்டி ஆயிட்டு. சாரி பாஸ். ஏன்னா அவர் லீவ் போட்டதால நான் காலையிலயே வரவேண்டி ஆயிட்டு. என்னோட வழக்கமான தூக்கத்துக்கு ஆப்பு வைச்சுட்டு வந்த கவலை வேற. இருந்தாலும் நேரத்தோட வேலையை முடிச்சிட்டு விடிவி பார்க்க போயிட்டன். அதனாலதான் இந்த பதிவு.

கௌதம் மேனன் படம் என்பதால் கொஞ்சம் நம்பிக்கையோடு களம் இறங்கலாம். ஒஸ்கார் நாயகனின் இசை படத்தை பார்க்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை எனக்குள் ஏற்கனவே உருவாக்கி விட்டிருந்தது. மின்னலே படத்துக்கு பிறகு கௌதம் முழுக்க காதலை கருவாக வைத்து எடுக்கும் படம். அடிதடி இல்லாமல் வழக்கமான தமிழ் சினிமா மசாலா கலக்காத படமாகத்தான் இருக்கும்னு என்னை நினைக்க வைத்தது.



படம் வெளிவர முன் வந்த ஸ்டில்ஸ் எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியது. மின்சார கனவு படத்தில் வரும் வெண்ணிலவே பாடல் காட்சி போன்ற ஸ்டைலிலும் இன்னும் அலைபாயுதே, உயிரே, காக்க காக்க, கீதாஞ்சலி படத்தை மனத்திரையில் கொண்டுவரும் ஸ்டைலிலும் ஸ்டில்ஸ் வெளியாகியிருந்தது. இதில் ஒரு சிலவற்றை தவிர ஏனையவற்றை படத்தில் காணோம்.

இது தவிர மெக்கிங் ஒப் வி டி வி, அதில் கௌதம் சொன்ன இரண்டு விடயங்களை குறிப்பிட்டு சொல்லலாம். ஒன்று சிம்பவும் த்ரிஷாவும் காதலிப்பதை ரகசியமாக படம் பிடித்திருப்பதாக சொல்லியிருந்தார். இன்னுமொரு விடயம் படம் பாத்துட்டு வெளியில வாரவங்க கொஞ்சம் புன்னகையோடும் கொஞ்சம் கண்ணீரோடும் வந்தால் அதுவே இந்த படத்தோட வெற்றின்னும் சொல்லியிருந்தார். எனக்கு அது நடந்தது.



'விண்ணைத்தாண்டி வருவாயா' டைட்டிலை சுட்டதற்காக ரஜீவ் மேனனுக்கு(மின்சாரக்கனவு படத்தின் இயக்குனர்) நன்றி சொல்லி படம் டைட்டிலோடு தொடங்கியது.

''காதலை தேடிக்கிட்டு போக முடியாது...

அது நிலைக்கணும்...

அதுவா நடக்கணும்...

நம்மள போட்டு தாக்கணும்...

தலைகீழ போட்டு திருப்பணும்...

எப்பவுமே கூடவே இருக்கணும்...

அதான் ட்ரூ லவ்...

அது எனக்கு நடந்தது...

முன்னோட்டத்தில் வருகிற இதே வரிகள் படத்துல தொடக்கத்தில் நெரேஷனா வரும். அப்போதான் ஹீரோவை அடிக்கும் அந்த காதல். புதிதாக வாடகை வீடெடுத்து வருகிறார்கள் கார்த்திக்கும்(சிம்பு) குடும்பத்தினரும். மேல் மாடியில் குடியிருக்கிறார் உரிமையாளர். அவருடைய மகள்தான் ஜெஸி (த்ரிஷா).

சினிமாவில் இயக்குனராகும் கனவுடன் அலையும் கார்த்திக் மலையாளத்து கிறிஸ்தவப்பெண் ஜெஸீயைக் கண்டவுடன் காதல் கொள்கிறார். இங்கே கிறிஸ்தவப்பெண் என்பதை அடிக்கோடிட்டுக்கொள்ளுங்கள். கார்த்திக்கை விட ஜெஸி ஒரு வயது கூடியவள் (நிஜத்திலும் சிம்புவைவிட மூத்தவர் த்ரிஷா) இதை ஞாபகப்படுத்தவே 'உனக்கு 81 வயதாகும்போது எனக்கு 80, எனக்கு 49ஆகும் போது உனக்கு 50' என்பதை இருமுறை சொல்லிக்காட்டுவார்.

சிம்பு படம் முழுக்க அழகாகத் தெரிகிறார். ஏன் த்ரிஷாவும் கூட அழகாத்ததான் தெரியிறாங்க. ஒரு சில க்ளோஸ்அப் காட்சிகளில் ஒப்பனையில் ஒரு சின்ன குறை தெரிகிறது. படத்தில் இருவருக்கும் சாதாரணமான ஆடைகள்தான். ஆடம்பரமான ஆடைகளில் த்ரிஷாவை பார்த்தவர்களுக்கும், அடிதடி பஞ்ச் வசனங்களோடு சிம்புவை பார்த்தவர்களுக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்ட கதைதான். இருந்தாலும் கௌதம் ஏற்படுத்திய இந்த மாற்றம் இருவருக்கும் ப்ளஸ்பொயின்டாகத்தான் இருக்கும்.

படத்தில் வருகிற ஒரே ஒரு சண்டை காட்சியும் அவ்வப்போது வருகிற சின்னப்பஞ்சும் சிம்பு ரசிகர்களை திருப்திபடுத்தும். சாதாரண ஆடைகளாக இருந்தாலும் த்ரிஷh செக்ஸியா(சிம்பு ஸ்டைலில்) தெரிகிறார்.



அலைந்து திரியும் காதலன் கார்த்திக் திடீரென்று காதலை சொல்வதும் பிறகு நண்பர்களாவதும் என்று வித்தியாசமாக நகரும் கதையில் சிம்புவும் த்ரிஷாவும் மனதில் நிறையும் அதே நேரம் சிம்புவுடன் அனேக காட்சிகளில் ஒளிப்பதிவாளராக வரும் கணேஷ;(படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்) தன் பங்கை சரிவர செய்திருக்கிறார். இடையிடையே இயக்குனராகவே வரும் கே.எஸ்.ரவிக்குமாரின் நக்கலை ரசிக்கலாம். கௌதம் ஸ்டைலில் தமிழ் ஆங்கிலம் கலந்த வசன நடையுன் நகரும் காதல் கதையில் விறுவிறுப்பான முதல் பாதியின் நிறைவில் ஜெஸிக்கு திருமணம் நிச்சயமாகிறது. இரண்டாவது பாதி சில இடங்களில் படம் எப்ப முடியும் என்கிற உணர்வைத்தருகிறது.



சரணம் பல்லவி என்கிற வழக்கமான இசை வடிவத்தில் மாற்றத்தை தந்த ஒஸ்கார் நாயகன் ரஹ்மானுக்கு பாராட்டுக்கள். படத்தில் டைட்டிலில் ரஹ்மான் பெயர் காண்பிக்கும் போது திரையரங்கில் இருந்த கைதட்டல் அவர் இசைக்காகவும் படம் பார்க்கிறாங்க என்பதை புரிய வைத்தது. பின்னணி இசை படத்துக்கு பக்க பலம். 'மன்னிப்பாயா', 'ஆரோமலெ', 'ஹோசானா' பாடல்கள் அற்புதம்.
தாமரையின் பாடல் வரிகள் கதையோடு பயணிக்கின்றன. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச் சொல்லும் யேசு நாதரின் தத்துவத்தை மன்னிப்பாயா பாடலில் வித்தியாசமா சொல்லியிருக்கிறார்(கண்டுபிடிங்க).

மனோஜ்ஜின் கெமரா இயல்பாக அழகை காட்டியிருக்கிறது.

இயக்குனர் யார் என்று தெரியாமல் படம் பார்த்தாலும் முடிவில் சொல்லிடலாம் இது Film by கௌதம் மேனன் என்று.

நிறையபேர் படம் பாத்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். அதனால் இன்னும் சில முக்கிய விடயங்களை சொல்ல முடியாமல் விழுங்குகிறேன்.

''காதலை தேடிக்கிட்டு போக முடியாது...

அதுவா நடக்கணும்...

'என்னை அடிச்சுது இந்த காதல் உங்களையும் அடிக்கும்னு நினைக்கிறேன்.'