பதிவுலகும் ஊடகத்துறையும் நானும் (பதிவு 01)

AM 11:43 Hisham Mohamed - هشام 14 Comments


பதிவெழுத ஆரம்பிச்ச பிறகு எனக்குள்ள கொஞ்சம் பக்குவம் தெரியுது. முன்பெல்லாம் எதெற்கெடுத்தாலும் அவசரப்படும் என்னோட புத்தி இப்போ பிரேக் அடிச்சு நின்னு நிதானமா யோசிக்க ஆரம்பிச்சிடுச்சி. நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் எழுதும் ஒவ்வொரு எழுத்துக்கும் என் ஆழ் மனதில் ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை அனுமதி வாங்கிக் கொள்கிறேன். ஒவ்வொரு பதிவும் என்னுடைய உள் மனதின் வெளிப்பாடுகள் என்பதால் என்னுடைய உள் மனது சராசரி ஒருவரின் பார்வையில் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதை பின்னூட்டங்கள் வழியாக தெரிந்து கொள்கிறேன்.


பின்னூட்டங்கள் உண்மையாக ஊட்டச்சத்துக்கள்.


ஒவ்வொரு பதிவரின் பதிவுக்கும் கிடைக்கிற பின்னூட்டங்கள் உண்மையாக ஊட்டச்சத்துக்கள். நான் பதிவெழுத ஆரம்பித்த நாட்களில் என்னை ஊக்கப்படுத்தி பதிவுலகின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் சொல்லிக்கொடுத்த பாபு, கோவி கண்ணன் மற்றும் பல நண்பர்களையும் என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் மனம் திறந்து சார்பாகவோ சார்பற்ற விதத்திலோ தங்கள் கருத்துக்களை சொல்லும் நண்பர்களுக்கும் பதிவுலகில் என்னை தொடரும் கலைக்குமார், KT.Sarangan, Ilangan போன்ற நண்பர்களுக்கும் எனது நன்றிகள். என்னுடைய பதிவுகளை பதிவுலகம் பார்ப்பதற்கு முதல் இரண்டு பேரை வட்புறுத்தி படிக்கச் செய்து கருத்தறிவதுண்டு. ஒருவர் அண்மையில் என்னுடைய சாதனையை முறியடித்த சக பதிவர் லோஷன். எனக்கும் அவருக்கும் இடையில் ஒரு போட்டி இருக்கு ஒரு நாளில் எத்தனை பேர் தளத்தை பார்வையிடுகிறார்கள் என்ற போட்டி. (மூனு பதிவெழுதி சாதனை படைத்ததையும் பதிவெழுதாம சாதனை படைத்ததையும் யாருக்கும் சொல்ல மாட்டேன். வேணும்னா லோஷனிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.) அடுத்தவர் மேடோனா அக்கானு அன்போடு அழைக்கும் அருந்ததி அக்கா. என்னுடைய பதிவுகளின் பின்னனி இது.


பதிவுகளால் நான் வருந்திய பொழுதுகள்.


சில சந்தர்ப்பங்களில் அநாதையாக பெயர் குறிப்பிடப்படாமல் வருகிற மோசமான மொழி அறிந்தவர்களின் பின்னூட்டங்கள் மனசுக்கு கொஞ்சம் கவலை தந்த சந்தர்ப்பங்களும் உண்டு. இருந்தாலும் நான் கவலைப்படுவதன் மூலமாக குறித்த அநாதையின் மோசமான பின்னூட்டத்தின் நோக்கத்தை நிறைவு செய்யக்கூடாது என்கிற காரணத்திற்காக மனதை தைரியப்படுத்திக்கொள்வதுண்டு. (அநாதை என்று விழித்ததற்கு காரணம் அவர்கள் பெயர் சொல்ல கூச்சப்படும் கேவலமான மொழி அறிந்தவர்கள்.) சில பின்னூட்டங்கள் குறி பார்த்து சுடுவதை போல இன ரீதியான தாக்குதல்கள். ஜம்பதை தாண்டும் என்னுடைய பதிவுகளின் முடிவில் ஒரு விடயத்தை மாத்திரம் தெளிவாக புரிந்து கொண்டேன். என்னுடைய பெயரை வைத்துதான் என் பதிவுகளுக்கு அர்த்தம் சொல்கிறார்கள் சிலர்.

சில கேவலமானவர்களின் சில பின்னூட்டங்கள் (அநுதாபம் தேடும் நோக்கத்தோடு பதியவில்லை). இவர்களுடைய ISP முகவரி Stat Counter இல் பதிவாகியுள்ளது.


அட பல பேருக்கு பிறந்த முஸ்லீம் நாய்களே....!!! 

Posted by Anonymous to Hisham Mohamed at December 27, 2008 2:11 PM


Anonymous said...
dai sony............................vaaya muududaa
October 24, 2008 5:17 PM



கண்ணீருடன் அன்னை வானொலியின் வாசலில் நான்


பதிவுலகில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த வேளை என்னோட தோழி வைதேகி (வெற்றி அறிவிப்பாளர் ரொம்ப நல்லவங்க) நான் கண்ணீருடன் அன்னை வானொலியின் வாசலில் நின்று கொண்டிருந்த கதையை சிரித்துக்கொண்டே ஞாபகப்படுத்தினாள். சந்தோசமாக ஒத்துக்கொண்டேன். ஏன் என்றால் நான் காக்கா புடிச்சோ பின்வாசல் வழியாகவோ ஊடகத்துறைக்கு வரவில்லை. இது என்னுடைய பல நாள் கனவு, உழைப்பு. இன்று நான் உழைக்கும் ஒவ்வொரு ரூபா காசும் வியர்வை சிந்தி உழைக்கிறேனோ இல்லையோ அவை என்னுடைய திறமைக்கு கிடைக்கும் சன்மானம் என்று நினைக்கிறேன்.(வியர்வை சிந்தி உழைக்கனும்னு ரொம்ப நாள் ஆசை காத்திருக்கிறேன் சந்தர்ப்பத்திற்கு)
இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் தெரிவுக்காக விண்ணப்பித்திருந்தேன். நேர்முகத்தேர்வில் பங்குபற்றுவதற்கான கடிதம் என் வீட்டுக்கதவை தட்டியது.(இன்னும் அந்த கடிதத்தை பத்திரமா வெச்சிருக்கேன்)

முதல் முறை இலங்கை வானொலிக்கு கண்டியில் இருந்து அதிகாலையில் புறப்பட்டேன். நிறைய எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் கொழும்புக்கு செல்கிறேன். சரியாக இடத்தை கண்டுபிடித்து இலங்கை வானொலியை அடைய கொஞ்சம் தாமதமாகிவிட்டது. வரவேற்பரையில் காத்திருந்தேன் ஒவ்வொருவராக குரல் தேர்வுக்காக போய் வருகிறார்கள். அப்போது குரல் தேர்வை நடத்தும் மூத்த அறிவிப்பாளர் ஒருவர் வெளியில் வந்தார். அவரிடம் நடந்ததை சொல்லி கடிதத்தை காட்டினேன்;. அவர் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் பல கனவுகளோடு வந்த எனக்குள் ரிச்டரில் கூட அளக்க முடியாத அளவு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ''எங்க படுத்து கெடந்துட்டு வாறிங்க. வெளியில போ உனக்கெல்லாம் வாய்ப்பு தர முடியாது''. என்று சொல்லிவிட்டார். கெஞ்சிக்கேட்டேன் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. நான் தாமதித்து வந்திருக்க கூடாது அதற்கான உண்மையான காரணத்தை அவர் ஏற்றுக்கொள்ளாதது பெரும் வேதனை அளித்தது. ஒரு வேளை அரசியல்வாதியின் கடிதம் இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரோ என்னவோ. இலங்கை வானொலிக்கு முன்னால ஒரு மாமரம் இருக்கு அதுக்கு கீழ நின்னுகிட்டிருந்தேன்(இன்றும் அந்த மாமரத்த பார்த்தால் எனக்கு அந்த ஞாபகம் வரும்). வீட்டில் இருந்து புறப்படும் போது கண்ட கனவுகள் எல்லாம் ஒவ்வொன்றாக என்னை கேலி செய்த வேதனை என்னை அறியாமலேயே கண்ணீரை வர வச்சிடுச்சி. அப்போ அந்த வழியா இரண்டு பேர் தமிழ்ல கதைச்சுகிட்டு வந்தாங்க யாருன்னு தெரியல இதுக்கு முதல்ல பார்த்ததும் இல்ல. கண்ணீரில் மூழ்கிப்போன என்னிடம் வந்து எதுக்காக அழுறீங்கன்னு விவரம் கேட்டாங்க நடந்ததயெல்லாம் சொன்னேன். ஒருத்தர் திரு ஜெயக்கிருஷ;ணா மற்றவர் திரு சந்திரமோகன் ரெண்டு பேரும் மேல் அதிகாரிகளோட கதைச்சு நேர்முகப்பரீட்சையில் தோற்ற எனக்கொரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தாங்க. நம்பிக்கையோடு முகம் கொடுத்தேன் நடந்த மூன்று கட்ட தெரிவிலும் அதிக புள்ளிகளை பெற்று முதலாவதாக தெரிவானேன். அதற்கு பிறகு பலரும் சோதனைக்காலமாக நினைக்கும் பயிற்சிக்காலம். இலங்கை வானொலியில் வந்த உடனே ஒலி வாங்கியை கையில கொடுத்து அறிவிப்பு செய்யச் சொல்ல மாட்டாங்க அதற்கு பல படிமுறைகள் இருக்கு. 7 மாத கால பயிற்சி............................


பயிற்சியின் தொடர்ச்சி நேரம் கிடைக்கும் போது அடுத்த பதிவில்....
தொடரும்.

யேசு நாதர் கிருஷ்ணபரமாத்மா புத்தர் நபிகள் நாயகம் இவர்கள் நேசித்த ஒன்று............

PM 2:34 Hisham Mohamed - هشام 5 Comments



கிறிஸ்மஸ் தினத்தில் என்னுடைய நாள் காலைப்பொழுது நேத்ரா TV இல் காலை விடிவெள்ளி சிறப்பு நிகழ்ச்சியோடு ஆரம்பமானதில் கோடி சந்தோசம். கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லவில்லையென்று எந்தவொரு நண்பரும் என்னை கோபிக்க முடியாது எல்லாருக்கும் டிவியில் வாழ்த்து சொல்லிட்டோம்ல. கிறிஸ்மஸ் காலை சிறப்பு நிகழ்ச்சியில் மன்னிப்பு என்ற தலைப்பை வழங்கியிருந்தோம். ஏராளமான நண்பர்கள் தொகுப்பாளர்களை கதைக்க விடாமல் கருத்து சொன்னதால டயட் இல்லாம நிகழ்ச்சி செய்த திருப்தி.


யேசு நாதரிடம் இருந்த உயிரிய பண்புகளில் ஒன்று.....

கிருஷ்ணபரமாத்மா வலியுறித்திய பண்புகளில் ஒன்று.....

நபிகள் நாயகம் போற்றிய பண்புகளில் ஒன்று....

புத்தர் போதித்த பண்புகளில் ஒன்று....


மன்னிப்பு.


இது கடவுளின் பண்பு. இதனாலதான மன்னிக்கிறவன கடவுள்னு சொல்றாங்களோ. இந்த உயரிய பண்பு எல்லா புத்திஜீவிகளுக்கும் வராது. எத்தனை புதுவருடங்கள் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் எங்கள மாத்த முடியாது. நாங்க எதுக்கு அவன்கிட்ட மன்னிப்பு கேட்கனும் இப்படி சொல்கிறவர்கள் எதை சாதிச்சதா நினைச்சு பெருமை பட்டுக்கொள்றாங்களோ தெரியல.மன்னிக்கிறதால என்ன குறைஞ்சு போயிடும்னு பயப்பட்றிங்க. உங்க எதிரிகளுக்கு உங்களால கொடுக்கக்கூடிய பெரிய தண்டனை மன்னிப்பு. மன்னிப்பை போல ஒரு தண்டனை இருக்க முடியாது சீசர் சொல்லியிருக்கிறார்.


தன்னை காட்டிக் கொடுத்த சீடனை கூட மன்னித்த மாமனிதர் யேசு பிறந்த இந்த நாளில் உலகம் கொண்டாடும் கிறிஸ்மஸ் தினத்தில் உலக மக்கள் எல்லாருக்கும் பணிவாக நான் கேட்டுக் கொள்வது என்னான்னா மன்னிப்போம் மறப்போம்.


இன்னைக்கு யாராவது கேக் மற்றும் பலகாரம் ஏதாவது கொண்டு வந்து தாரதா இருந்தா மாலை 6.30க்கு முதல்ல கொண்டுவாங்கப்பா. நான் என்றால் இதுவரைக்கும் யாருக்கும் பண்டிகை பலகாரம் கொடுத்ததில்லை ஏன்னா அப்படி கொடுத்தா உலகத்துல இருக்கிற எல்லா பண்டிகைக்கும் இல்ல கொடுக்கனும். அது நான் பெற்ற பாக்கியம். பொதுவாக வானொலி தொலைக்காட்சி தொகுப்பாளராக கடமையாற்றும் ஒருவர் எல்லா பண்டிகையையும் கொண்டாட வேண்டியது கடமை.


பொருளாதார சிக்கல்கள் நீங்கி, பயங்கரவாதம் அடியோடு அழிந்து, உலகெங்கும் சமாதானமும் சந்தோசமும் நிலைத்திருக்க எல்லோருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.


பி.கு - பிறக்கப்போகும் புது வருடத்தில் பதிவுலகத்திற்கு பாசத்தோடு சொல்கிறேன். மதச்சார்பான தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இரண்டு இனத்தவர்கள் முட்டி மோத களம் அமைக்கும் விதமான பதிவுகளை தவிர்ப்போம். இனச்சார் மதச்சார் நிறச்சார் கொள்கைகளை ஒழித்து புதுவருடத்தில் புதிய சிந்தனைகளை பதிவுலகம் பதிய முன்கூட்டிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இலங்கை பாடசாலை மாணவிகளுக்கு நீள்காற்சட்டை அணிய தடையா?

PM 2:54 Hisham Mohamed - هشام 3 Comments


இலங்கையின் கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரனவக்கவுக்கு,

பஞ்சத்துல அடிபட்ட பரதேசி பாசத்துடன் எழுதிக்கொள்வது. ஐயா நான் உங்களுக்கு ஓட்டு போட்டதில்ல. ஆனா நீங்க எனக்கு ஒரு சூப்பர் ஹீரோ. உங்களுடைய ஒவ்வொரு சிந்தனையும் செயலும் சாய்வு கோபுரம் போல் இலங்கையின் புகழை உலகத்திற்கே கொண்டு செல்லும்.

ஐயா உங்களுடைய சேவை இந்த நாட்டுக்கு தேவை. நீங்க இந்த நாட்டின் முதுகெலும்பு. இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் அவர்களுடைய கலாச்சார விழுமியங்களை அடியோடு ஒழித்துக்கட்ட தனித்து நின்று போராடுகிற ஒரு வீரன். பள்ளிவாசல்களில் ஐவேளை தொழுகைக்கான அழைப்பை விடும் ஒலிபெருக்கிகளுக்கு மாத்திரம் தடையை ஏற்படுத்திய மாவீரன் ஐயா நீங்கள். அடுத்து முஸ்லிம் பாடசாலை பெண்கள் அணியும் நீள்காற்சட்டைக்கு ஆப்பு வைக்க போறிங்களாமே. ஜயா நீங்க வேணும்னா பாருங்க இதுக்காகவே வேடுவ இனத்தவங்க உங்களுக்கு பெரிய ஒரு கௌரவிப்பு விழாவே நடத்தப்போறாங்க. (அடுத்தது ஹிஜாப்தானே அதுதான் தலையில கட்டுவாங்க).


இப்படி நல்ல சமாசாரங்களா பன்னுற உங்கள பாத்து பிச்சு மணி கேட்டான் பாருங்க ஒரு கேள்வி.'' உலக பொருளாதாரம் சரிந்து விழுகிற தருவாயில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிற தருவாயில் பெற்றோல் விலை குறையுமா குறையாதா என்கிற தருவாயில் எப்படி ஐயா உங்களால் மாத்திரம் இப்படி மொக்கை சிந்தனைகளை கொண்டு வர முடிகிறது'' என்று கேட்குறான் மடப்பய அவனுக்கெப்படி புரியம். நீங்க பன்னுங்கய்யா நாங்க எப்பவும் உங்க கூடதான் எங்களுக்கு மான் கராத்தே எல்லாம் நல்லா தெரியும்.


ஐயா கை கழுவாம சாப்பிடுறவன் எத வேணும்னாலும் சொல்லட்டும். கடைசியா நீங்க கொண்டு வரப்போற நீள்காற்சட்டை தடை சூப்பர் பாடசாலை பசங்கெல்லாம் ஒரே குஷியா இருக்காங்கன்னு கஞ்சா சொல்றான். அத விட சந்தோசமான ஒரு செய்தி நம்ம பூந்தி பாய் போராட்டம் நடத்தப்போறாராம். இது சந்தோசமான போராட்டம் நீங்க கொண்டு வரப்போற இந்த சட்டத்தை இலங்கை முழுவதும் கொண்டுவரணும் என்றும் அதிலும் குறிப்பாக பெண்கள் நீள்காற்சட்டை போடக்கூடாதுன்னு கொண்டு வரணுமாம். அப்பதான் சாமி நாடே சிக்கனமா வாழ கத்துக்கும். அதுக்கப்புறம் பாருங்க கொலை கற்பழிப்பு எல்லாம் எப்படி குறையுதுன்னு. அந்த போராட்டத்துல உங்கள ஒருத்தன் உலக நாயகன்னு சொல்லிட்டாங்கய்யா சந்தோசத்துல அவன மேஞ்சிட்டாய்ங்க. ஏன்னா நீங்க என்ன உலக நாயகன் மாதிரி ஒம்பது பொன்னாட்டியா வைச்சிருக்கிங்க. ஐயா நீங்க நல்லவரு .

என்னதான் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு சமாசாரத்தை கொண்டு வரும்போது. நம்ம ஐடியா மணியையும் நீங்க கூப்பிட்டிருக்கனும். அவன் எவ்வளவு மேட்டர் வைச்சிருக்கான் தெரியுமா. அவன் சொல்றான் நயன்தாராவ உங்கட ஆலோசகராக்கியிருக்கணுமாம். ஏன்னா இந்த ஆடை விசயத்துல ரொம்ப சிக்கனம் பேண்றவங்க இவங்கதான். நிறைய சமாசாரங்கள சொல்லி கொடுத்திருப்பாங்கய்யா. அப்புறம் நம்ம ஊர் முக்கோண தொலைக்காட்சியில நடத்துற டான்சிங் ஸ்டார் மாதிரி நிகழ்ச்சிகள்ல வார பெண்களின் உடையை எல்லாருக்கும் கட்டாயப்படுத்தியிருக்கணுமாம். சாமி நீங்க நாலு எழுத்த படிச்சவங்க தப்பா ஏதும் சொல்லி இருந்தா மன்னிச்சுகிங்க.




கலாசாரம் சம்பிரதாயம் எல்லாம் எவனோ ஒருத்தன் உருவாக்கினது தானே அத நம்ம சீங்கம் நீங்க உருவாக்கினா என்ன. முஸ்லிம் அமைச்சர்ட மகளே நீள்காற்சட்டை இல்லாம போறப்போ இவனுங்களுக்கு என்னவாம்.

ஐயா இப்பதான் சீனாக்காரிகள் நம்ம நாட்டுக்கு வந்திருக்காங்க இன்னும் பலபல சமாசாரங்கள கொண்டுவாங்க அப்புறம் பாருங்க பேங்கொக்,இந்துனேசியா,சோமாலியான்னு கலக்கப்போறோம்.

சம்பிக்க சிந்தனை வாழ்க!!!!!

இப்படிக்கு,

கிறிஸ்மசிற்கு தேவாலயத்திற்கு பெய்ன்ட் அடிச்சு பொங்கல் கொண்டாடப்போகும் உண்மையான முஸ்லிம்.
Check Spelling
பி.கு - இப்படியான சமாசாரத்திலாவது அமெரிக்காவ முந்தப்போரத நினைச்சா பெருமையா இருக்கு.

''நாயே இது உனக்கு நாங்கள் கொடுக்கும் கடைசி முத்தம்'' - ஸெய்தி

PM 9:47 Hisham Mohamed - هشام 2 Comments

அன்புள்ள ராமசாமியின் மின்அஞ்சலை நாகரீகம் கருதி சில சென்சாருக்கு பிறகு U சான்றிதழோடு உங்கள் பார்வைக்கு தருகிறேன்(அடைப்புக்குள் நான்)..



உலகத் தலைவன் என்று தன்னை தானே அழைத்துக்கொள்ளும் பெருமிதம் பிடித்த கொலைக்காரன் சப்பாத்துக்களால் அடிவாங்கியது உலக வரலாற்றில் சந்தோசமான ஒரு பதிவு. அதில் ஒரு சப்பாத்தாவது அவன் முகத்திரையை கிழித்திருக்கக்கூடாதா?
(என்ன இருந்தாலும் அவர் ஓரு நாட்டின் தலைவர் இல்லையா இப்படியா நடந்து கொள்வது )

Muntadar-al-Zaidi

தனித்து நின்று போராடிய ஈராக் டிவி நிருபர் ஸெய்தியின் தில் கூட்டமாக வந்த கொலைக்காரனின் பாதுகாவலர்களுக்கு என்றும் வராது. கூட்டு சேர்ந்து ஸெய்தியின் கை கால்களை முறிக்கவும் முகத்தில் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தவும் தான் அவர்களால் முடியும். அரபுலகில் ஸெய்தி இப்பொழுது ஒரு தேசபக்தனாக போற்றப்படுகிறான். (ஆளாலுக்கு உசுப்பேத்தி அவன் குடும்ப வாழ்க்கையை நாசமாக்கிடாதிங்கப்பா)

படம் - அமெரிக்காவிற்கு ஈராக் கொடுத்த பரிசு.

வல்லரசு தலைவன் அவனுடைய ஆட்சிக்காலத்தில் விதைத்தவற்றை பிரியாவிடையில் பெற்றுக்கொண்டான். இவன் மீது வீசப்பட்ட சப்பாத்துக்களை பல கோடிகளை கொடுத்து ஏலத்தில் எடுக்க பலரும் தயாராகி வருகின்றனர்.
(உலக பொருளாதாரத்தின் ஆணிவேராக இருந்த எங்கள் உலக தலைவருக்கு என்னதான் கோபம் இருந்தாலும் ஈராக் செய்தது அவ்வளவு நல்லதாக படவில்லை. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்திருக்கலாம்தானே)


சதாமை இலக்கு வைத்து யுத்தத்தை ஆரம்பித்தவன் சதாமை கொன்ற பிறகும் ஈராக்கின் ரத்தத்தை இன்னும் ருசிபார்ப்பதேனோ?
(ஸெய்தி போன்றவர்களை விட்டு வைக்க கூடாது பாருங்கோ)


ஈராக் பெண்களின் கற்பை பறிக்கவும் சிறுபிள்ளைகளின் ரத்தத்தை குடிக்கவும் இன்னுமொருவன் ஈராக் மண்ணில் காலடி எடுத்த வைக்க அஞ்சமாட்டானா?


ஈராக்கின் புழுதி படிந்த சப்பாத்து தாக்குதலை விட கேவலமான ஒரு தாக்குதலை துப்பாக்கி ரவைகள், க்ளஸ்டர் குண்டுகள், விமானத்தாக்குதல்கள் ஏற்படுத்த முடியுமா?
(ஈராக் சப்பாத்துல அப்படி என்ன இருக்கு)

புத்தாண்டில் பதவியேற்கும் ஒபாமாவுக்கு இதை விட மகத்தான ஒரு வரவேற்பை யாரால் கொடுக்க முடியும்?
(பாவம் இப்பதான் புள்ள குட்டிகளோட வெள்ளை மாளிகைக்கு சுன்னாம்பு அடிக்க கிளம்பியிருக்காரு அவர எதுக்கு வம்புக்கு இழுக்கிறீங்க.)

முறைதவறி பிறந்த குழந்தை

AM 12:21 Hisham Mohamed - هشام 4 Comments

சனிக்கிழமை அரச தொலைக்காட்சியில் மாலை செய்தி அறிக்கையை வாசிச்சிட்டு நொறுக்குத்தீணியோட சந்தோசமா வீடு திரும்பினேன். Body wash பன்னிட்டு சூடா ஒரு காப்பி குடிக்கலாம்னு குளிக்கபோன தண்ணீ கட். சடார்னு என்னுடைய ஞாபகத்துக்கு வந்தது கொஞ்ச காலத்துக்கு முதல்ல நான் தகவல் பரிமாற்று தொலைக்காட்சியொன்றில் பார்த்த தண்ணீர் இல்லாம போனால் புத்தீஜீவிகள் என்ன செய்வார்கள் என்ற விவரணத்திரைப்படம்தான். அப்படி ஒரு நிலை வந்தா தண்ணீரைப்பொன்ற ஒரு திரவப்பதார்த்தத்தின் தேவை அதிகரிக்கும் அதை எங்கிருந்து பெறுவது. இருக்கவே இருக்கு ஒரேஞ்ச் பழச்சாறு மற்றும் பால். இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தா சூப்பர் ஸ்டாரின் கட்அவுட் இற்கு பாலாபிNஷகம் செஞ்ச மாங்கா பசங்களுக்கு கல்லடிக்க நினைக்காதா? சவரம் செய்வதற்கு ஒரேஞ்ச் பழச்சாறு ஆனால் சவரம் செய்த பழச்சாறு இன்னும் பல தேவைகளுக்கும் பயன்படும். இப்படி நினைச்சு பார்க்க முடியாத பல விடயங்கள்.

இருக்கும் போது அருமை தெரியாதுன்னு சொல்லுவாங்க இது தண்ணீருக்கு மட்டுமில்ல லியனாடோ டாவின்சி என்கிற அறிஞன் வாழ்ந்த காலத்தில் கூட அவர் சொன்ன பல கண்டுபிடிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை இப்பொழுது ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது டாவின்சி வாழ்ந்திருக்க வேண்டிய யுகம் மாறிப்போனதாக நான் உணர்கிறேன். டாவின்சியைப்பற்றி பதிவெழுத ரொம்ப நாளாக காத்திருந்தேன். சந்தர்ப்பம் அமைந்துவிட்டது.



இத்தாலியில் ஒரு வழக்கம் பெயரோடு பிறந்த இடைத்தையும் சேர்த்தே அழைப்பார்கள். லியனாடோ இவர் வின்சி என்ற இடத்தில் பிறந்தார். வின்சியில் பிறந்ததால் டா வின்சி என்று அழைத்தார்கள். பொதுவாக லியனாடோ என்றே தன்னுடைய படைப்புகளில் பெயர் இடுவது இவரது வழக்கம். இவர் தன்னுடைய தந்தை பெயரை அதிகம் பயன்படுத்துவதில்லை அதற்கு போதிய சான்றுகள் இல்லாத வரலாறு சொல்லும் கதை லியனாடோ முறைதவறி பிறந்த குழந்தை என்பதாகும்.

மோனாலிசா ஓவியம் மூலமாக உலகப்புகழ் பெற்ற லியனாடோவை கட்டிடக்கலைஞராகவும் ஓவியராகவும் சிற்பியாகவும் பொறியியலாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் அறிந்திருக்கிறோம். லியானாடோவின் பல ஓவியங்கள் இன்றும் பல மில்லியன் டொலர்களுக்கு விற்பனைக்கு விடப்பட்டாலும் அவருக்குள் இருந்த ஓவீயங்களின் மவுசு காரணமாக நாம் அறியாத இன்னுமொரு பக்கம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இவர் ஒரு சிறந்த சிந்திக்கக்கூடிய கற்பனை கதைகளை எழுதும் திறமைப்படைத்தவர்.

வலைப்பூ யுகம் லியனாடோவின் காலத்தில் இருந்திருந்தால்?? இருப்பினும் அவருடைய படைப்புக்கள் பலவற்றை இணையதளங்களில் படிக்க கிடைப்பது சந்தோசத்தை தருகிறது.

இவருடைய சிந்தனைக்கதைகள் சிறுபிள்ளைகளுக்கான பொழுதுபோக்கு கதைகள் இல்லை. பல உள் அர்த்தங்களை கொண்ட வயது வந்தவர்களுக்கான அர்த்தமுள்ள கதைகள். நான் படித்த ஒரு கதை கொடி மரமும் பழைய கம்பும்.

சுவர்க்கத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் பசுமையான இலைகளை கொண்ட ஒரு கொடி தன்னுடன் நெருங்கி இருக்கும் ஒரு பழைய கம்பை கேவலமாக பார்த்து வருத்தப்பட்டுக்கொண்டது.

ஏய் பழைய கம்பே நீ என்னை விட்டு சற்று விலகி செல்லக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியது அந்த கொடி..

எந்த பதிலும் சொல்லக்கூடாது என்ற திடமான கொள்ளையோடு இருந்த கம்பு எதுவும் பேசவில்லை.

அடுத்ததாக அந்த கொடி தன்னை சுற்றி இருந்த முள் வேலி ஒன்றை பார்த்து நீ என்னுடைய அழகைக் கெடுக்கிறாய் உன்னால் ஒதுங்கிப்போக முடியாதான்னு கேட்டதாம்.

காதில் விழாதது போல வேலியும் தன்பாட்டில் இருந்தது.

கொடி உச்சியில் இருந்து இதை கவனித்துக்கொண்டிருந்த பல்லி கதைக்க ஆரம்பித்தது.

ஏய் அழகான கொடியே........
நீ பார்க்கலயா?
இந்த பழைய கம்பு உன்னை தாங்கிக்கொண்டிருக்கு.
இந்த முள் வேலி தீய சக்திகளிடமிருந்து சதா உனக்கு பாதுகாப்பு தருது..

இது போல ஏராளமான சிந்தனை கதைகளை லியனாடோ எழுதியிருக்கிறார். இதில் பல கதைகள் உண்மை வடிவில் இருந்து வாய்க்கு வாய் பரவி மாற்றம் பெற்று விட்டன.
(உங்க கிட்னியை தட்டி ஒரு சிந்தனையை பின்னூட்டமா போடுங்க.....)

இவருடைய சிந்தனை கதைகளை படிக்க ஆசைப்படுபவர்களுக்காக... லியனாடோவின் கற்பனை கதைகள்.

தண்ணீ வருது குளிச்சிட்டு வாரேன். அடுத்த பதிவில் சந்திப்போம்.

மும்பாய் யுத்தக்களமுனையின் மறக்க முடியாத தருணங்கள்.

PM 10:38 Hisham Mohamed - هشام 4 Comments



ந்திய வரலாற்றில் பதியப்பட்ட மிக மோசமான தாக்குதல்.

60 மணி நேர தாக்குதலில் உயிர் தியாகங்களுக்கு பின்னர் மனித
நேயம் ஜெயித்தது.

இந்தியா விழித்துக்கொள்ள இது தக்க தருணம்.

20 முதல் 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞாகள் குழு முழு உலகையும் திரும்பிப்பார்க்க இடம் கொடுத்தது இந்திய பாதுகாப்பில் இருந்த ஓட்டைகள்தான்.

ஒரு பிரதமராக தேசத்தை வழிநடத்தி செல்லவேண்டிய மன்மோகன் சிங் இது தொடர்பாக கொஞ்சம் தாமதமாகவே குரல் கொடுத்தார்.

அயராத இந்திய பாதுகாப்பு படையின் முயற்சி பாராட்டத்தக்கது.










தாக்குதல் மேற்கொள்ளவந்த தீவிரவாதிகள்........









தமது மக்களுக்காக போராடும் இராணுவ வீரர்கள்.



உயிரிழந்த பெண் ஊடகவியலாளரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.



மும்பாய் தாக்குதலில் உயிரிழந்த தாஜ் ஹோட்டல் அதிகாரி Vijaya Rao இன் தாய் புகைப்படத்துடன்.




60 மணி நேர தாக்குதலில் உயிர் தியாகங்களுக்கு பின்னர் மனித நேயம் ஜெயித்தது.


முத்தத்தில் மூழ்கிப்போன கதை

PM 1:45 Hisham Mohamed - هشام 5 Comments

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பாட்டு என்ன ரொம்ப பாதிச்சுது. தாம் தூம் படத்துல ஆழியிலே முக்குளிக்கும் பாட்டு அடிக்கடி கேட்குறேன் சலிக்கவே இல்ல. மறைந்த ஜீவாவை தமிழ் திரை ரொம்ப மிஸ் பன்னுது.



ஹரிஸ்ஜெயராஜ}க்கு பாராட்டுக்கள் இருந்தாலும் எனக்கு கொஞ்சம் வருத்தம் எதையும் அளவுக்கு மீறி கொடுத்தா நஞ்சா போயிடும்னு இரண்டைர நிமிசத்துக்குள்ள பாட்டை முடிச்சிட்டாரு பாருங்கோ.

முத்தத்துக்கு வித்தியாசமா விளக்கம் கொடுத்த கவிஞருக்கு ஒரு முத்தம் கொடுக்கலாம். முத்தத்திற்கு விளக்கம் கொடுத்த எத்தனை பாடல்கள் வந்திருந்தாலும் இந்த பாட்டுக்கு ஆயிரம் முத்தம் கொடுப்பேன்.

முத்தத்தில் பல வகை இருக்கு என்னவிட யாராவது அனுபவசாலிகள் சொன்னா நல்லா இருக்கும் (அதுக்காக நான் ஒன்னும் நல்லவன் இல்ல)

கவிஞர் மூச்சுக்கும் முத்தத்திற்கும் முடிச்சு போட்ட விதம் அருமை.
ஆழியிலே முக்குளிக்கும் அழகே....

மூச்சுக்கும் முக்குளிக்கிறதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறத போல முத்தத்திற்கும் மூச்சுக்கும் தொடர்பிருக்கு வேணும்னா ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன்(புத்திஜீவிகள் சொல்லி இருக்காங்க).

இப்படித்தான் ஒரு மங்காவோட பேச்சக்கேட்டு ஒருத்திக்கு முதல் முத்தம் கொடுக்கலாம்னு முயற்சி செய்தேன் இப்ப அவளோ அவ குழந்தைக்கு கொடுக்கிறாள் முத்தம்.

15 வயசுல யாரோ பெயர் தெரியாத ஒரு நண்பன்தன்னுடைய காதலியுடன் கைகோர்த்துக் கொண்டு நடக்கஎனக்குள் அடித்த கத்ரினா அது.
எவளாவது ஒருத்தியை எப்படியாவது மடக்க வேண்டும் என்கிற ஆர்வத்தோடு பாடசாலை விட்டு காத்திருந்தேன் மாட்டியவளோ ஒரு அப்பாவி ஆனால் நான் தான் என்கிற மனிதர்களில் இவளும் ஒருத்தி.

பைத்தியக்காரத்தனமாக பதின்ம வயதில் எனக்குள் ஏற்பட்ட பருவ மாற்றத்தை நினைத்து இப்பொழுது சிரிக்கிறேன்.

கஞ்சா அடிக்கிறவன் காசு இல்லாம கேவலமா பிச்சை கேட்குற மாதிரி (பிச்சைக்காரர்கள் ஒரளவுக்கு மேல கேட்க மாட்டாங்க) கெஞ்சினேன். ஆனால் அவள் ரொம்ப நல்லவ.............

உன் தின் என்ற கன்னத்தில் திம் என்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா......
இச்சைக்கோர் இலை வைக்கவா.....
தாம்பத்திய உறவுக்கு பாலமாக கடவுள் கொடுத்த ஒரு மருந்து இந்த முத்தம். அதுக்காக அவளை முத்தமிட்டே சாகடிக்கிறேன்... அவளை கட்டிப்போட கயிறு தேவையில்லை...அடடே இப்ப நானும் கூட கவித எழுத ஆரம்பிச்சிட்டேன் பாருங்கோ.

இச்சைக்கோர் இலை வைக்கவா.....
இந்த வரி எனக்கொரு சம்பவத்தை ஞாபகப்படுத்துது என்னோட வேடிக்கையான நண்பர் ஒருவர் காதலி பிரிஞ்சிட்டாங்கிறதுக்காக ஒரு பாட்டு கேட்பாரு பாருங்கோ. ஜானகி பாடிய 'எடுத்த வச்ச பூவும் விரிச்சு வைச்ச பாயும்' பாட்டு.

உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி முந்தானை படியேறவா..........
மூச்சோடு குடியேறவா......
வர்த்தைகளால் அடக்க முடியாத அளவுக்கு அனுபவிக்கிறேன்.அவ்வப்போது அடிக்கிற காத்துல அவ கூந்தல் என் முகத்தை தடவுவதை நான் உணர்கிறேன். ஆனால் அவள் முதல் காதலி இல்லை(அப்போ ஏராளமா இருக்கான்னு கேட்காதிங்க நான் அவ்வளவு நல்லவன் இல்லை)பாரதிக்கு ஒரு கண்ணம்மா போல எனக்கும் ஒருத்தி(முடிஞ்சா அவளுக்கொரு பெயர் வைச்சிடுங்க)

உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி எந்நாளும் சூடேறவா.........
என்னோட கண்ணம்மாவுக்கு சேலை கட்ட பழக்கும்போது கடைசி மடிப்பை இடுப்பில் செருகும் போது என் விரல் அவ இடுப்புல பட்டதுல பத்திக்கிட்ட நெருப்பை அணைக்க கொஞ்ச நேரம் எடுக்கும் அதுதானோ இது.

உன் உம் என்ற சொல்லுக்கும் இம் என்ற சொல்லுக்கும் இப்போதெ தடை வைக்கவா....
மௌனத்தில் குடி வைக்கவா.............
அடுத்த வரியில நான் செத்துட்டேன் ஆனாலும் மறக்க முடியாது..அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீறி மறித்தாலும் மறக்காது அழகே.....
இந்த முத்த யுத்தமே வேண்டாம் கண்ணம்மா உன் கையை பிடிச்சிக்கிட்டு உரிமையோட அந்திப்பொழுதில் நாலடி நடக்கிற இன்பமும் பாசத்தோட என் முகத்தை நீ பார்க்கிற அந்த அன்பும் போதும் வேறென்ன வேண்டும்.
அடி வானம் சிவந்தாலும் கொடி பூக்கள் பிறந்தாலும் உனைபோல இருக்காது அழகே...

நீங்களும் கொஞ்சம் முக்குளிச்சித்தான் பாருங்களேன்.(பாட்டுக்குள்ள)

இலங்கை யுத்தக்களமுனையிலிருந்து.

PM 12:09 Hisham Mohamed - هشام 3 Comments


சேறு பதிந்த சப்பாத்துடனும் நனைந்த சொக்சுடனும் சேற்றில் சிக்கிய வாகனத்தை தனது சகாக்களுடன் தள்ள முற்படுகிறார் இலங்கை இராணுவ வீரர். இதுதான் இலங்கை யுத்தக்களமுனையின் உண்மை கதை. பருவ மழை என்கிற புதிய ஒரு எதிரிக்கு முன்னால் இருதரப்பும் தங்கள் காய் நகர்த்தல்களை திட்டமிட்டு செயற்படுத்துகின்றன.

ஏற்கனவே இலங்கை அரச படையினரிடம் பல பிரதேசங்களை பறிகொடுத்த வேதனையில் புலிகள் கையாளும் யுத்த தந்திரம் கொஞ்சம் வித்தியாசமாக அமைந்ததை கடந்த கால தாக்குதல்கள் நிரூபித்திருக்கும். தரைமார்க்கமாக தற்பொழுது தாக்குதல் நடத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல காரணம் கடவுளோடு மோத யாரால் முடியும். (அதுதான் பருவமழை)

பருவ மழைக்காலம் ஆரம்பமான பிறகு புலிகள் கடல் மார்க்கமாகவும் வான் மார்க்கமாகவும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கப்பல்களுக்கு தாக்குதலை மேற்கொண்ட பிறகு மன்னார் மற்றும் தலைநகர் கொழும்பின் களனி பிரதேசத்தின் மீது புலிகளின் இரண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தியிருந்தன அதன் பிறகு வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலையும் சுட்டிக்காட்டலாம். இவை இலங்கை அரசுக்கு பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தாவிட்டாலும் பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக களனி மின் நிலையத்தின் மீதான தாக்குதல் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை செலுத்தும்.
இலங்கை இராணுவத்தினர் அதிரடியாக ஆரம்பித்த தாக்குதலின் வேகம் கடந்த வாரங்களில் கொஞ்சம் மந்த கதியில் செல்வதை அவதானிக்க முடிந்தது. பருவ மழையின் தாக்கம் யுத்த நடவடிக்கைகளை பெரிதும் பாதித்திருக்கிறது. இலங்கை படையினரின் வான் தாக்குதல்களும் மப்பும் மந்தாரமுமான காலநிலையால் மந்த கதியிலேயே இடம்பெறுகிறது.

கிளினொச்சியை நெருங்கிக்கொண்டிருக்கும் இராணுவத்தினர் மிகுந்த மனவலிமையுடன் இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. புலிகளின் வெப்தளங்களின் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் தரைமார்க்கமாக தாக்குதல்களை மேற்கொள்வதை விடுத்து தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிய முடியும் அதேநேரம் பருவ மழையை புலிகள் சாதகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான சான்றுகளாக வான் மற்றும் கடல் தாக்குதல்களில் அவர்கள் காட்டும் தீவிரத்தை குறிப்பிடலாம்.
புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பிரதேசங்களை அறிய
இந்த தளத்தை சொடுக்கி விரிவான வரைபடத்தை பார்க்கலாம்.
http://www.defence.lk/orbat/Default.asp

ஒபாமா வென்றாலும் மெக்கெய்ன் வென்றாலும் இதில் மாற்றம் ஏற்படப்போவதில்லை................

மெக்கெய்ன் தோல்வியடைய என்ன காரணம்?

PM 1:01 Hisham Mohamed - هشام 0 Comments


உண்மையில் இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றை புதுப்பித்திருக்கிறது என்பது யாரலும் மறுக்க முடியாத உண்மை. ரிபப்லிகன் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட பல மாநிலங்களிலும் அக்கட்சி கோட்டைவிட்டது. வெள்ளையர்களின் வாக்குகளோடு ஒரு கறுப்பினத்தவர் ஜனாதிபதியான முதல் முறை.


இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தல் உலகத்துக்கு நல்ல பாடத்தை கற்பித்தது. இனத்தாலும் நிறத்தாலும் ஏன் ஊர்களாலும் பிளவுபட்டிருக்கும் பிளவுபடச்சொல்லும் மங்கா பசங்களுக்கு கொடுத்த சிறந்த கசையடி.


இம்முறை நடைபெற்ற தேர்தல் கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளை இனத்தவர்களுக்குமிடையில் நடந்த போட்டியா?


இந்த படத்தில் இருப்பது போல ஒபாமா வெள்ளை இனத்தவராகவும் மெக்கெய்ன் கற்பினத்தவராகவும் இருந்திருந்தால் இந்த நிலை மாறியிருக்குமா?


என்னதான் இருந்தாலும் இலங்கை இந்திய அரசியல்வாதிகளை விட அமெரிக்கர்கள் ஒரு படி மேல் என்பதை ஒபாமாவின் வெற்றிக்கு பிறகு மெக்கெய்ன் ஆற்றிய உரை உணர்த்தியிருக்கிறது. ''அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் ஒபாமா''. அடுத்த 4 ஆண்டுகள் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா எடுக்கப்போகும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்குமாறும் தன்னுடைய ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டவர் வாழ்த்துச்சொல்லவும் மறக்கவில்லை.


மெக்கெயன் இந்தியா அல்லது இலங்கை நாட்டைச்சேர்நதவராக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் 'ஒபாமா செய்தது முழுக்க மோசடி எல்லா வாக்குகளும் கள்ள வாக்குகள்."


இனி என்ன ஒபாமாவா? ஒசாமவா?

இலங்கை பற்றிய சகல விடயங்களையும் தெரிந்து கொள்ள ஒரு தளம்.

AM 12:24 Hisham Mohamed - هشام 0 Comments


இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சி சேவைகள், வங்கிகள் மேலும் பல விடயங்களை அறிந்து கொள்வதற்கான தளம்.

web

பதிவுலகத்திற்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

AM 12:18 Hisham Mohamed - هشام 0 Comments


கறுப்பு ஒக்டோபர் - இலங்கையின் வடபுல சோனிகள் விரட்டியடிக்கப்பட்டு 18 ஆண்டுகள்.

AM 12:07 Hisham Mohamed - هشام 19 Comments


ஒக்டோபர் 25ம் திகதி நமீதாவுடைய பிறந்த தினம்னு நினைக்காதிங்க அதவிட சந்தோசமான நாள் புலிகளுக்கு.


1990ம் ஆண்டு வேலைக்கு போயிருந்த அப்பாவுக்கு உறவுக்காறங்க சொன்ன தகவல் அவர கதி கலங்க வைத்தது அப்படின்னு ஒரு மகன் தன்னுடைய வேதனையை சொல்கிறார்.


10 வருஷத்துக்கு மேல உட்காந்து சாப்பிடலாம் அப்படின்னு விடுதலை புலி உறுப்பினர்கள் மார்தட்டிக்கொண்டார்கள்.


இலங்கையின் வடபுலத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்த அத்தனை முஸ்லிம் இனத்தவர்களும் விரட்டியடிக்கப்பட்ட நாள். இவர்களை கதறக்கதற ஆயுத முனையில் விரட்டிய புலிகள் சொன்ன ஒரு விடயம் அசையும் அசையா சொத்துக்கள் எதையும் கொண்டு போகக்கூடாது.


'அக்காவோட கழுத்துல ஆசையாக அப்பா வாங்கிக்கொடுத்த நகைகளை புலிகள் கண் முன்னே அறுத்தெடுத்த நிகழ்வை நினைச்சா நான் ஆம்புளயா பொறந்தது நினைச்சி வெட்கப்பட்றேன்.' அகதி முகாமில் இருக்கிற ஒரு வாலிபர்.


'என்னோட மகன் படிப்பு செலவுக்கு மத்தவங்ககிட்ட பிச்ச கேட்குற மாதிரி பணம் கேட்பதை கண்ணால பாத்த பிறகு நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்' உடல் ஊனமுற்ற ஒரு தந்தை சொல்கிறர்.


90களுக்கு முன்பு நல்ல வசதி வாய்ப்புக்களோடு நாலு பேருக்கு தர்மம் செய்யக்கூடிய மாடி வீடுகளில் இருந்தவர்கள் 2008இல் இன்று மழை பெய்தால் ஒழுகுகிற குடிசைகளில் மூன்று வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடுவதை நினைத்தால் சந்தோசமாக இருக்கும் புலிகளுக்கு. புலிகளால் அவதிப்படுகிறவர்கள் முஸ்லிம்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல இந்துக்களும்தான் இன்று வடக்கில் அகதிகளாக ஆயிரக்கணக்கில் மர நிழல்களில் வாழுகிறவர்களும் தென் இந்தியாவின் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களும் இதற்கு நல்ல சான்று.


அடுத்த வீட்டுக்காரனோட வேலி பிரச்சினையில் ஆரம்பிக்கிற யுத்தம் அடுத்த நாட்டு எல்லை வரை யோயிடுச்சி. இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி ஆடு மாடுகளாக வாழப்போறோம்?


ஒரு விசயத்தை கவனிச்சிங்களா என் குடும்பம், என் வீடு, என் சொத்து என்று வாழ்கிற நிறைய பேர் வானொலிகளிலும் தொலைக்ககாட்சியிலும் இந்த செய்திகளை கேட்டு விட்டு "எந்த நாளும் இதே பிரச்சினை" என்று சலித்துக்கொண்டு AC கார், கை நிறைய சம்பளம், அழகான மனைவி, பிள்ளைகள் குடும்பம் என்று சந்தோசமாக வாழவில்லையா.(உங்கள தப்பா சொல்லல......)


ஒரு சில இனவாதிகளால் தமிழ் பேசும் அப்பாவி மக்கள் அல்லல் பட வேண்டியிருக்கு. இவங்க பிள்ளைகள் வசதியா வெளிநாடுகளில் படிக்கிறதுக்காக கோமதி அக்காவுடைய மகன் மழையில நனைஞ்சுகிட்டு வெடிகுண்டு சுமக்கணுமா? ஏன் அவன் படிச்சா படிப்பு ஏறாதா?

உலக அரங்கில் அண்மையில் அரங்கேற்றப்பட்ட அருமையான சில நாடகங்கள் .

PM 7:23 Hisham Mohamed - هشام 0 Comments

தசாவதாரம் சிவாஜியை விட இந்த நாட்களில் நாடகங்கள் சூப்பர் ஹிட். ஆனால் இந்த நாடகங்களில் வில்லன் யார்னு தெரியல.

'ஒரே நாளில்' இலங்கையில் எடுக்கப்பட்ட சூப்பர் ஹிட் நாடகம்

இலங்கையின் மாகண சபை எதிர்கட்சி தலைவர் முன்னாள் இராணுவ அதிகாரி ஜானக்க பெரேரா மற்றும் 20க்கு மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட அதே நாளில் கருணா பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பு. தமிழ் சினிமாவின் பாதிப்பு இதில் அதிகம் தெரிந்தது ஏன்ன கெஞ்சம் ஓவரா அதிரடி. இந்த கதையில் யார் வில்லன்னு தெரியல

சூப்பர் ஸ்டாரின் 'ஒக்கனக்கல்'

ரஜினியின் ஒக்கனக்கல் நாடகம் புதிய சாதனை படைத்தது. ஏற்கனவே இவர் நடித்து வெளியான 'வருவேன் ஆனா வரமாட்டேன்' வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. ரஜினி படம் என்றாலே முப்பது நாள் சாப்பிடாம நாலு வாரம் குளிக்காம பெருசா கட்அவுட் வைச்சு அபிNஷகம் செய்கிறபோது நாடகம் என்றால் சொல்லவா வேணும். ஒக்கனக்கல் நாடகத்தில் முக்கியமா ரஜினி இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். ஆனால் வில்லன் யார்னு தெரியல

வடிவேலுவின் விட்டில் கல் வீசி தாக்குதல் நடத்திய நாடகம். இந்த நாடகத்தை முழுமையாக பார்க்காததால் படத்தின் பெயரும் விபரமும் தெரியல. க்ளைமெக்சில் விஜயகாந்த் கோர்ட்டுக்கு வாராரு. வில்லன் யார்னு தெரியல

இது இந்த வருடம் வெளியான சில நல்ல நாடகங்கள்.

அவ்வப்போது டுப்பாகூர் நாடகங்ளும் வரும்...................

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் ???

PM 2:00 Hisham Mohamed - هشام 0 Comments

அரசியல் சாக்கடையில் எவையெல்லாம் விழுமோ அவை நாசமாகிப்போகும் என்பது பச்சக் குழந்தைக்கும் தெரிந்த விஷயம். இப்பெல்லாம் நம்ம தாய்மார் சின்ன பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுவது எம் பி மாமா வரார்னுதான். அண்மையில் இலங்கை கிரிக்கட் விழுந்ததும் இது போல ஒரு அசிங்கமான சாக்கடையில்தான். இலங்கை கிரிக்கட்டில் அது இன்னும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அர்ஜூன ரனதுங்க இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக இலங்கை ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு அதிரடியாக பல மாற்றங்கள் இலங்கை கிரிக்கட்டில் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றன. இது சாதகமா பாதகமா என்பது ஒரு பக்கமிருக்க இதன் பாதிப்பு இலங்கையின் கிரிக்கட்டை சீரழித்துவிடும் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.


ஜனாதிபதி இந்த நியமனத்தை வாரி வழங்கக் காரணம் அரச கட்சியின் வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தும் நோக்கம் ஒன்று தான். ரணதுங்கவின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியில் அதிகமான வாக்குகளை பெறுவது வழக்கம். இதனால் ரணதுங்கவின் குடும்ப உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு நல்ல பதவிகளை வழங்கியது. ஏற்கனவே இந்த இலங்கை அரசாங்கத்தை பலரும் சகோதரர்களின் கம்பனி என்று நக்கலடிப்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். இதே பணியை இலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவாராக நியமிக்கப்பட்ட முன்னாள் அணித்தலைவர் ரணதுங்க பின்பற்ற தொடங்கிவிட்டார். முதல் நடவடிக்கையாக தன்னுடைய சகோதரரை இலங்கை அணியின் முகாமையாளராக நியமித்தார். அடுத்த அடி ஜசிசி தடை செய்த ஜ பி எல் அமைப்பில் விளையாடும் தனது நெருங்கிய உறவினரான அதபத்து உள்ளிட்ட சில வீரர்களுக்கு தேசிய மட்டத்திலான போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கினார். இன்னுமொரு அடி வெகுவிரைவில் விழப்போகிறது. இலங்கை கிரிக்கட்டில் நீண்டகாலம் சிரேஷ;ட அதிகரியாக கடைமையாற்றி வரும் முன்னாள் வீரர் ஒருவருக்கு கர்த்திருக்கிறது(நடக்கத்தானே போகுது நடந்த பிறகு உங்களுக்கு புரியும்). இன்னுமொரு விடயத்தை இந்த இடத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டும்

விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் கிரிக்கட் தலைவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு பூகம்பமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

எது எவ்வாறாக இருப்பினும் 'தாருன்யட ஹெடக்' என்ற அமைப்பின் தலைவர், ஜனாதிபதியின் மகன் தலைமையில் ஹம்பாந்தொட்டையில் கட்டப்படும் சர்வதேச தரத்திலான மைதானத்தின் பணிகள் மும்முரமாக நடக்குதாம்.

(புதிய சர்வதேச தரத்திலான மைதானத்திற்கு ரணதுங்கவின் பெயரை வைத்து இலங்கை அணியை அவரது குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் கொண்ட அணியாக உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...)

ஆப்ரகாம் லிங்கன் உயிருடன் இருந்திருந்தால் இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக்கியிருக்கலாம்.

AM 11:32 Hisham Mohamed - هشام 1 Comments


ஆப்ரகபம் லிங்கனும் கிரிக்கட் களத்தடுப்பு சிந்தனையும்.

வெற்றி வானொலியின் காலை நேர நிகழ்ச்சிக்கு நல்ல சிந்தனைகளை தேடிக் கொண்டிருந்த போது நான் பார்த்த ஆப்ரகாம் லிங்கனின் சிந்தனை இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நிலையை ஞாபகப்படுத்தியது.

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்சில் இந்திய அணி களத்தடுப்பில் விட்ட தவறுகள் அணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற தேவையை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.

சரி ஆப்ரகாம் லிங்கன் எப்படி சம்பந்தப்படறார் அப்படின்னு கேட்கிறீங்களா. அவரோட சிந்தனையை தருகிறேன் அப்ப உங்களுக்கு புரியும் "You can hide some of the fielders all of the time, and all of the fielders some of the time, but you can not hide all of the fielders all of the time."


அவுஸ்திரேலிய அணி வீரர்கள் விக்கட்டுகளுக்கிடையில் ஒட்டங்களை பெற எடுத்த வேகம் களத்தடுப்பில் ஈடுபட்ட இந்திய வீரர்களின் மோசமான வெளிப்பாடுகள் 430 என்ற ஒட்ட எண்ணிக்கையை எட்ட உதவியது அவுஸ்திரேலிய அணிக்கு.


பொன்டிங் போட்டி ஆரம்பமாக கொஞ்ச நாளைக்கு முன் சில விடயங்களை ஊடகங்களோடு பகிர்ந்து கொண்டார். அதில் முக்கியமாக ஆஸி வீரர்கள் விளையாடுவது 'new age' cricket என்றும் ஆஸியின் இலக்கு இந்திய அணியின் மூத்த வீரர்கள் என்றும் குறிப்பிட்டார்.(இதன் அர்த்தம் ஒரு வேளை இப்படி இருக்கலாம் ஆஸி ஒட்டங்களை குவிக்க எடுக்கும் வேகம், இந்தியாவின் களத்தடுப்பு, அல்லது இரண்டும்.) உண்மையில் பொன்டிங் சொன்னது போல ஆஸியின் ஆட்டம் 'new age' cricket தான். இந்திய அணியின் களத்தடுப்பு 90க்கு முதல் கிரிக்கட்டை ஞாபகப்படுத்துகிறது.

லிங்கனின் சிந்தனை அது இனி என் சிந்தனை முதல் நாள் ஆட்டத்தின் போது 90 ஓவர்கள் வீசப்பட்டன. ஏன் 100 ஓவர்கள் வீசக் கூடாது போட்டி ஆரம்பமானதோ 9.30க்கு நிறைவடைந்தது 4.30க்கு பெங்களுரில் 5.30 வரை போதிய வெளிச்சம் காணப்பட்டது. ஒரு நாள் போட்டிகளில் 100 ஓவர்கள் மொத்தமாக வீசப்படுகின்ற போது டெஸ்ட் இல் ஏன் வீசக்கூடாது. தேனீர் இடைவேளைக்காக எடுத்துக் கொள்ளும் 20 நிமிட நேரத்தில் 4 ஓவர்கள் பந்து வீசலாம்.

எதுலயும் லாபத்த தானே பாக்கனும்...............

நாலு பேர் தப்பா பேசுவாங்க.... யார் அந்த நாலு பேர்?

PM 12:26 Hisham Mohamed - هشام 6 Comments

அந்த நாலு பேர் யாருன்னு தெரியாது ஆனா தப்பா பேசுவாங்க. இந்த நாலு பேருக்கு பயப்பட்ற நம்ம நண்பர்கள் ஏன் அந்த ஒருத்தனுக்கு(இறைவன்) பயப்பட்றதில்ல.

இது என்னோட அனுபவ பதிவு மனசுல உள்ளத கொட்டி தீர்க்கப்போறேன் நேரம் இருந்தா படிச்சுப்பாத்துட்டு பின்னூட்டம் எழுதுங்க.

பதிவு எழுத ஆரம்பிக்கும் போது பக்கத்துல இருந்த லோஷன் அண்ணாவுக்கும் அருந்ததி அக்காவுக்கும் (எல்லாரும் ஒன்னாதான் வெற்றிக்காக உழைக்கிறம்)சின்னதா ஒரு விவாதம் நடந்தது. ஏற்கனவே பதிவின் ஆரம்பத்தில் 'அந்த ஒருத்தனுக்கு பயப்பட்றதில்ல' என்று சொல்லியிருக்கேன் கடவுள் நல்லவங்கள தேடி வருவாருன்னும் கஷ;டத்துல தான் கடவுள தேடி போவேன்னும் லோஷன் அண்ணா சொல்றார் அதுக்கு அது கூடாது என்று ஆரம்பித்த அருந்தி அக்கா சொன்னாங்க மனிதனுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எவ்வளவோ இருக்கு நீங்க கூட கடவுள தேடி பேவீங்க உங்களுக்காக இல்லன்னாலும் உங்க குடும்பத்துக்காகவாவது செய்வீங்க இப்படி நேர் எதிரான கருத்துக்கள் பறந்து கொண்டிருந்த போது எனக்கொரு விஷயம் எழுதனும் போல இருந்தது பள்ளிகளிலும் கோயில்களிலும் ஏன் எல்லா மதத்தலங்களிலும் அதிகம் கடவுளை தரிசிப்பவர்கள் 50 வயதை தாண்டியவர்கள் பொதுவாக வாழ்க்கையை கிட்டத்தட்ட முழுமையாக வாழ்ந்தவர்கள். ஏன் இந்த வயதெல்லையில் இருப்பவர்கள் அதிகம் கடவுளை தரிசிக்கனும் தெளிவாக புரியுது மரண பயம்....... இது ஏன் ஆரம்பத்துல வரக்கூடாது? எப்படி வரும். 50 வயதுக்கு பிறகு மரணம் நேரும் என்பது நிச்சயமான உண்மை ஆனால் அதற்கு முதலும் வரலாம் வராமலும் போகலாம்.

இந்த 50 வருட வாழ்க்கையில கிட்டத்தட்ட அரைவாசி முடிஞ்சுது (அதுக்காக எனக்கு 25 வயதுன்னு நீங்க நினைக்க கூடாது) அதுக்குள்ள நான் கத்துக்கிட்டத கொட்டப்போறேன். வாழ்க்கைய புரிந்து கொள்ள எனக்கு ரொம்ப காலம் எடுத்தது. என்னுடைய மத குரு, ஊடகத்தில் காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தவருடைய இறப்பு என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. இப்ப கூட என்னுடைய கையடக்கத்தொலைபேசியில ஏதாவதொரு இலக்கத்த தேடும்போது அவருடைய இலக்கம் கடந்து போகும் அப்ப நான் பட்ற வேதனைய சொல்ல வார்த்தைகள் இல்ல அந்த இலக்கம் இப்ப பாவனையில் இல்லையென்றாலும் அத அழிக்கிறதுக்கு மனசும் இல்ல. அவரு சொல்லி கொடுத்த நல்ல விஷயங்கள கொஞ்சம் கொஞ்சமா கடைபிடிக் ஆரம்பிச்சிட்டேன். எஞ்சியிருக்கிற அரைவாசி வாழ்க்கையில சரி நல்லவனா வாழ முயற்சி செய்யப்போறேன். இல்லையென்றால் நாலு பேர் தப்பா பேசுவாங்க..

ஊடகத்துறையை விட்டுவிட்டு அப்பாவோட சேர்ந்து வியாபாரத்தை கவனி இல்லன்னா மேல்படிப்பை கவனின்னு அடிக்கடி சொல்ற அம்மாவோட வார்த்தைக்கு காது கொடுக்கலாம்னு நினைக்கும் போதே எனக்கு ஞாபகத்துக்கு வாரது அன்னை வானொலி இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக 8 மாதகாலமாக நான் பெற்ற கடுமையான பயிற்சி. அறிவிப்பாளனாக இப்படி ஒரு பயிற்சியான்னு அன்று வெறுத்துப்போனாலும் இன்று அதன் தேவையை உணர்கிறேன்.

திரு அப்துல் ஹமீத், திரு ஜெயகிருஷ;ணா, திரு சந்திரமோகன், மறைந்த திரு கணேஷ;வரன், திருமதி ராஜேஷ;வரி சண்முகம், திரு ராஜகுரு சேனாதிபதி, திரு அஹமத் முனவ்வர் இவர்களிடம் அறிவிப்புத்துறையின் குழந்தைப்பருவத்தில் பெற்ற பயிற்சி என்னை இன்று வெற்றி வானொலியின் உதவி முகாமையாளர் கதிரையில் அமர வைத்திருக்கிறது. இவ்வாறான ஒரு பதவி எனக்கு கிடைத்திருக்காவிட்டால் ஒரு வேளை ஊடகத்துறைக்கு விடை கொடுத்திருப்பேன். இந்த புதிய பயணத்தில் நான் சந்தித்தவர்களில் ஒருவர் லோஷன் அண்ணா இவர்தான் வெற்றியின் முகாமையாளர் என்னோட புதிய குரு. முகாமையாளர் பயிற்சி நெறிக்கான என்னுடைய குரு (ஆனால் அவர் கட்டணம் அறவிடுவதில்லை) அவ்வப்போது அவர் சொல்லித்தருகிற நல்ல விஷயங்களை எனது நாட்குறிப்பு பதிவு செய்யும்;. எப்பவுமே பைபிளோடு நான் பார்க்கிற அருந்ததி அக்கா, வெற்றியின் ஒழுங்கமைப்பாளர் இலங்கையில் தனியார் வானொலியின் ஆரம்பம் முதல் இன்று வரை பல நட்சத்திரங்களை பார்த்தவர் இவரிடமிருந்து நான் பெற வேண்டிய அனுபவ அறிவு ஏராளம். இப்படி இன்னும் ஏராளமாக சொல்லலாம் அதுக்குள்ள பல வருஷங்கள் ஓடிடும் அப்போ நான் எப்ப நல்லவனாகிறது? இல்லையென்றால் நாலு பேர் தப்பா பேசுவாங்க..

பதவியும் பணமும் இல்லாத போது இருந்த சந்தோஷம் இப்ப என்கிட்ட இல்ல. பணமும் பதவியும் நிரந்தரமில்;லை என்பதை தற்போதைய உலக பொருளாதாரமும் அரசியலும் உறுதிப்படுத்துவதாக அண்மையில் 16வது பாப்பரசர் சொல்;லியிருந்தார். எளிமையாக வாழ்ந்த நபிகள் நாயகமும் புத்தரும் அதற்கு நல்ல உதாரணம். பணம் கொஞ்சம் அதிகமாக இருந்தா இன்னும் கொஞ்சம் சேர்க்கலாமே அப்படி ஒரு ஆசை. பதவி இருந்தா அடுத்தவர்களால தொல்லை. இது இரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கைய தேட கொஞ்சம் காலம் தேவை. அதுக்குள்ள நாலு பேர் தப்பா பேச மாட்டாங்களா?

5 வருட ஊடகத்துறை வாழ்விலும் சரி அதற்காக ஏங்கிய நாட்களிலும் சரி எத்தனையோ விதமான மனிதர்களை பார்த்துவிட்டேன்;. எங்க குடும்பத்துலயும் சரி பரம்பரையிலும் சரி ஊடகத்துறையில் யாரும் கால் பதித்ததில்ல. ஏன் அது பற்றி அறிந்ததும் இல்ல. எங்கப்பா புகையிரதத்தில பேப்பர் போட்டு உழைப்பை தெடங்கினவரு. அப்புறம் நான் எப்படி அறிவிப்பாளரானேன்னு கேட்கிறீங்களா? அம்மா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. பாடசாலையில் அவங்ககிட்ட படிக்க கிடைச்சது பெரும் பாக்கியம். இப்போ இலங்கை அரச தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், வெற்றி எப் எம் தனியார் வானொலியின் உதவி முகாமையாளராகவும் இருக்கேன். கொஞ்ச காலத்துக்கு முதல்ல இதெல்லாம் வெறும் இலட்சியக்கனவு எனக்கு. அத அடைய நான் எடுத்த 4 வருடங்கள் எதிர்பார்ப்புகளுடனும் ஏக்கத்துடனும் கழிந்ததால் நாட்கள் நகர்ந்ததே தெரியல. எனக்காக நான் வாழ்ந்தது தான் அதிகம் இந்த இடைப்பட்ட காலத்தில் கவலையாக இருந்த சில சந்தர்ப்பங்களில் சில நல்ல மனிதர்களின் நாலு வார்த்தை மனசுக்கு ஆறுதலாக இருக்கும். அண்மையில் கொஞ்சம் மனசுக்கு கவலையா இருந்தது அப்போ என்னோட மூத்த அதிகாரி ஒருவர் சொன்ன ஒரு விஷயம் நகைச்சுவையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது உங்களை மனதளவில் பாதிப்படைய செய்கிறவர்களை நகைச்சுவை பாத்திரங்களாகவும்; அவர்களுடைய செயல்களை இவ்வாண்டின் சிறந்த நகைச்சுவையாகவும் எடுத்துக்கொள்ளுங்கள் பிரச்சினையே வராது என்றார்.
இறுதியாக ஒரு விஷயம் நான் உங்களுக்கு சொல்லவில்லையென்றால் நாலு பேர் தப்பா பேசுவாங்க.

உலகின் பணக்காரர் பில்கேட்ஸூம் சரி நாங்களும் சரி எதை கொண்டு போக போறோம். சூரியன் மேற்கில் உதிப்பதற்கு முன் எனக்கு நிறைய பொறுப்புகள் காத்திருக்கி;ன்றன ஏன்னா அதுக்கு பிறகு பிரார்த்தனைகளை என்னுடைய இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
இப்ப சொல்லுங்க உங்களுக்கு தெரியுமா யார் அந்த நாலு பேர்?ஒரு வேளை நாத்தம் புடிச்ச நம்ம உடலை சுமந்து போக போற அந்த நாலு பேரா இருக்குமோ!!!!!

இலக்கியத்துக்கான நோபல் பரிசு

PM 7:07 Hisham Mohamed - هشام 0 Comments


இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Jean-Marie Gustave Le Clezio வின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. Le Clezio வின் "sensual ecstasy" என்ற படைப்புதான் நோபல் பரிசுக்கு வழிவகுத்தது. 68 வயதான Le Clezio, "Desert"என்ற படைப்பின் மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்.

நேபாள மக்களின் புதிய கடவுளாக மூன்று வயது சிறுமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

PM 6:33 Hisham Mohamed - هشام 5 Comments


நேபாளம், காத்மண்டு மக்களின் நம்பிக்கை படி வழக்கமாக பெண் சிறுமிகளைதான் தெய்வமாக தெரிவு செய்து வணங்கி வருகிறார்கள். இவர்களை குமாரி என்று அழைப்பார்கள். 2 முதல் 4 வயது வரையான சிறுமிகள் கடவுள் தேர்வில் கலந்து கொள்வார்கள் இவ்வாறு தெரிவு செய்யப்படும் சிறுமிகள் இறுதிகட்ட தேர்வில் சித்தியடைந்தால் கடவுளாகும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அது அவ்வளவு இலகுவானதல்ல ஒரு அறையில் இரவு முழுவதும் இருக்க வேண்டும் அங்கே ஆட்டுத்தலைகளும் மாட்டுத்தலைகளும் வைக்கப்பட்டிருக்கும். குறித்த சிறுமி பருவ வயதை அடையும் போது புதிய கடவுளை தேடும் பணி தொடங்கும்.


சகல தேர்வுகளிலும் சித்தியடைந்து 3 வயது சிறுமி ஒருத்தி கடவுளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் தன்னுடையை பெற்றோரை விட்டு பிரிந்து குறித்த ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்பது தான் விதி இதனால் சிறுமியின் தந்தை atap Man Shaky குறிப்பிடுகையில் கொஞ்சம் கவலையாக இருந்தாலும் தன்னுடைய மகள் கடவுளாக போற்றப்படுவதை நினைத்து பெருமைப்படுகிறார். கடவுளாக போற்றப்படும் சிறுமி சிவப்பு நிற ஆடைகளை மாத்திரமே அணிய முடியும்.


குஷ'பு, எம் ஜி ஆர் இப்படி நிறைய பேருக்கு கோயில் கட்டி வழிபடும் போது இது சாதாரண விடயம். அவர்களுடைய நம்பிக்கை காலகாலமாக இப்படித்தான் இருக்கு என்ன செய்வது.............


நன்றி - msnbc

5 நிமிடத்தில் பயணம் செய்யக்கூடிய தொலைவில் இருந்த சகோதரியை 60 வருடங்களாக தேடிய சகோதரர்.

PM 2:10 Hisham Mohamed - هشام 1 Comments


அண்ணன் என்னடா தம்பி என்னடான்னு வாழுகிற Fast Food யுகத்துல வித்தியாசமான ஒரு சம்பவம் லண்டனிலிருந்து.

George Culwick க்கு வயது 87 அவரது சகோதரி Lucy Heenan வயது 88, கடந்த 60 வருடங்களுக்கு முன்னர் George தனது தொழில் நிமித்தம் பல நாடுகளுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டதால் தனது 20ஆவது வயதில் புறப்பட்டு சென்றவர் தாயகம் திரும்பும் போது தன்னுடைய சகோதரி காணமல் போனதை உணர்ந்தார். பல வருடங்களாக இங்கிலாந்தின் பல மாநிலங்களிலும் தேடி அலைந்தும் அவரால் கண்டுபிடிக்க முடியாமல் போனது(இதுக்குதான் குடும்ப பாட்டு ஒன்னு தயாரிக்கனும்னு சொல்றது)

3மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற George, நடைபெற்ற குடும்ப அங்கத்தவர் நிகழ்வொன்றில் இன்னுமொரு உறவினரின் உதவியுடன் சகோதரியை இனம் கண்டார். தான் வசித்த இடத்தில் இருந்து 5 நிமிடத்தில்(4miles) பயணம் செய்யக்கூடிய Quinton என்ற இடத்தில் 60 வருடங்களாக வசித்த சகோதரியை பிரிந்து வாழ்ந்ததை நினைத்துவருத்தப்படுகிறார் George.

தற்பொழுது பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகளோடு ஓடி பிடித்து விளையாடுகிறார்களாம் அக்காவும் தம்பியும்.

நட்புக்கு இலக்கணம் ஆண்கள்

AM 11:04 Hisham Mohamed - هشام 3 Comments


பெண்கள்
ஒரு மனைவி இரவு முழுதும் வீட்டுக்கு செல்லாமல் அடுத்த நாள் காலையில் தன்னுடைய கணவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் தன்னுடைய தோழி வீட்டில் இருப்பதாக சொல்லியிருக்கிறார். அந்த கணவர் தன்னுடைய மனைவியின் பல இடங்களில் இருக்கும் பத்து தோழிகளிடம் விசாரித்த போது பத்து பேரும் அவள் வரவில்லையென சொல்லியிருக்கிறார்கள்.

ஆண்கள்
ஒரு கணவர் இரவு முழுதும் வீட்டுக்கு செல்லாமல் அடுத்த நாள் காலையில் தன்னுடைய மனைவிக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் தன்னுடைய நண்பன் வீட்டில் இருப்பதாக சொல்லியிருக்கிறார். அந்த மனைவி தன்னுடைய கணவரின் பல இடங்களில் இருக்கும் பத்து நண்பர்களிடம் விசாரித்த போது 5 நண்பர்கள் தன்னுடன் தங்கியதாகவும் 5 பேர் இன்னும் தங்களுடன் தங்கியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

எப்படி மாமா இப்படி திறந்த புத்தகமா இருக்கீங்க