மறக்கக் கூடாத, ஒருபோதும் மன்னிக்கக் கூடாத ஒரு நிஜத்தின் குரல்! 🇵🇸

8:02 PM Hisham 0 Comments

 Majestic Cineplexஇல் திரையிடப்பட்ட 'The Voice of Hind Rajab' திரைப்படத்தின் பீரிமியர் காட்சிக்கு சென்றிருந்தேன். திரை இருண்டு, விளக்குகள் ஒளிரத் தொடங்கிய கணம்... அரங்கிலிருந்த எவராலும் அத்தனை எளிதாகத் தத்தம் இருக்கைகளிலிருந்து எழுந்துவிட முடியவில்லை. அங்கு நிலவியது வெறும் நிசப்தமல்ல; ஒட்டுமொத்த மானுடமும் தோற்றுச் சிறுத்துப்போனதன் பேரவல மௌனம்!



இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர், இஹாப் ஐ.எம். கலீல் அவர்களுடன்


ஹிந்த் ரஜப்... வெறும் ஆறு வயதே நிரம்பிய சிறுமி. சற்று கற்பனை செய்து பாருங்கள்... ஒரு கார். சுற்றிலும் உறவுகளின்—மாமா, மாமி, அக்கா, அண்ணன் என அத்தனை பேரின்—ரத்தம் தோய்ந்த சடலங்கள். அந்தப் பிணக்குவியலின் நடுவே, உறைந்துபோன பெருவலியோடும் மரண பயத்தோடும் உயிருக்குப் போராடும் அந்தச் சின்னஞ்சிறு மலர், கைகளில் ஒரு செல்பேசியைப் பற்றிக்கொண்டு விம்மி விம்மித் துடிக்கிறாள்:
"என்னை வந்து கூட்டிட்டு போங்க... எனக்கு ரொம்பப் பயமா இருக்கு... யாராவது என்னைக் காப்பாத்துங்க..."
ஒரு மணி நேரமல்ல, பல மணி நேரங்கள். ஒவ்வொரு வினாடியும் ஒரு பெருயுகமென நகர, மரணத்தின் வாயிலில் நின்று அவள் எழுப்பிய அந்த அபயக் குரல் இன்றும் என் ஆன்மாவை உலுக்கிக் கொண்டே இருக்கிறது.
அவள் இருந்த அந்த காரை நோக்கி 350-க்கும் மேற்பட்ட தோட்டாக்களைப் பாய்ச்சி, மனிதாபிமானத்தின் சுவடுகூட இல்லாமல் சல்லடையாகத் துளைத்தெடுத்திருந்தார்கள். உலகமெங்கும் அவளது மரணக் கதறல் ஒலித்துக்கொண்டிருந்த அதே வேளையில், அவளை மீட்கப் புறப்பட்ட செம்பிறைச் சங்கத்தின் (Red Crescent) ஆம்புலன்ஸும் இரக்கமற்றுத் தாக்கப்பட்டது. உயிர்காக்கச் சென்ற அந்த இரு உன்னத மருத்துவச் சேவையாளர்களும் ஆம்புலன்ஸோடு சேர்த்துச் சாம்பலாக்கப்பட்டனர்.
மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டு ஒரு பிஞ்சு உயிர் கதறியும்கூட, அவளைக் காப்பாற்ற இந்தச் சபிக்கப்பட்ட உலகத்தால் முடியாமல் போனது.
இது ஹிந்த் என்ற ஒரு சிறுமியின் துயரம் மட்டுமல்ல. குருதி தோய்ந்த இந்தப் பாலஸ்தீனப் போரில் இதுவரை 70,000-க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இதில் பெருங்கொடுமை என்னவென்றால், பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் பிஞ்சுக் குழந்தைகளுமே. ஒவ்வொரு மரணமும் வெறும் காகிதப் புள்ளிவிவரமல்ல; அவை ஒவ்வொன்றும் ஹிந்தைப் போல ஈவிரக்கமின்றிக் கலைக்கப்பட்ட ஆயிரமாயிரம் அழகிய கனவுகள். இவற்றைக் காணும்போது நெஞ்சம் இன்னும் கனக்கிறது; காரணம், இலங்கை போரின் இறுதித் தருணங்களும் இதுபோல ரத்தம் தோய்ந்த ஆயிரம் கதைகளைச் சொல்லும் என்பதுதான் வலிநிறைந்த நிதர்சனம்.
ஏற்பாடு செய்த இலங்கைக்கான பாலஸ்தீன தூதரகம் (Embassy of Palestine in Sri Lanka), பாலஸ்தீன மக்களுக்கான இலங்கை நட்புறவுச் சங்கம் மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் ஆகியோருக்கு நன்றிகள்.
'The Voice of Hind Rajab' – நாம் மறக்கக் கூடாத, ஒருபோதும் மன்னிக்கக் கூடாத ஒரு நிஜத்தின் குரல்! 🇵🇸💔

'தகவல் யுத்தம்' Information War

7:59 PM Hisham 0 Comments

 "உண்மை தனது காலணிகளை அணிந்துகொள்வதற்குள், பொய் உலகையே ஒருமுறை சுற்றி வந்துவிடும்" என்பார்கள். இது இன்று வெறும் பழமொழி அல்ல; நம் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களின் நிதர்சனம்.



இன்றைய அரசியல் என்பது களத்தில் நடக்கும் மோதல் அல்ல; அது உங்கள் அலைபேசித் திரையில் நடக்கும் 'தகவல் யுத்தம்' Information War.

முன்பெல்லாம் ஒரு பொய்யைப் பரப்ப அச்சகங்கள் வேண்டும், தொலைக்காட்சிகள் வேண்டும். இன்று ஒரு WhatsApp Forward அல்லது ஒரு 'Facebook Reel' போதும். அடுத்த பத்து நிமிடங்களில் பல லட்சம் இதயங்களுக்குள் ஒரு நஞ்சை விதைத்துவிட முடியும்.

பொய் என்பது இருட்டில் வளரும் காளான் போன்றது. எங்கே தகவல் வெற்றிடம் இருக்கிறதோ, அங்கே பொய் அரியணை ஏறுகிறது. உதாரணமாக ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்படும்போது, அதன் நன்மைகளைச் சொல்ல உண்மை தடுமாறினால், "இந்தத் திட்டத்தால் உங்கள் சொத்து பறிபோகப் போகிறது" என்று ஒரு பொய் கிளப்பிவிடப்படும். அந்தத் திட்டத்தின் அசல் நோக்கம் உங்களுக்குத் தெரிவதற்கு முன்பே, உங்கள் மனதில் பயம் உட்கார்ந்துவிடும். கோபமும் பயமும் வந்துவிட்டால், மனித மூளையின் தர்க்க ரீதியான பகுதி வேலை செய்வதை நிறுத்திவிடும். இதையே அந்தப் பிரச்சாரப் பீரங்கிகள் விரும்புகின்றன.

உண்மையின் பக்கம் நிற்பவர்களுக்கு Counter-Propaganda கற்றுத்தரும் முதல் பாடம் என்ன தெரியுமா?
ஒரு பொய் முளைக்கும் முன்பே, "அவர்கள் இப்படித்தான் சொல்ல வருவார்கள், ஆனால் உண்மை இதுதான்" என்று முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும். இதுவே இன்றைய காலத்தின் மிகச்சிறந்த தற்காப்பு. இதைத்தான் 'Pre-bunking' என்று செல்வார்கள். அதாவது, நோய்த்தொற்று வந்தபின் சிகிச்சை பெறுவதை விட, அது வராமல் இருக்கத் தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றது.

அதே நேரம் பிரச்சார பீரங்கிகளின் வலையில் சிக்காமல் இருக்க ஒரு செய்தி நம்மை அதீத கோபத்திற்கோ அல்லது பயத்திற்கோ உள்ளாக்கினால், அதை Share செய்வதற்கு முன் ஐந்து நிமிடம் பொறுத்திருக்க வேண்டும். ஏன் என்றால் அந்த உணர்ச்சிதான் பொய்யின் முதலீடு. உங்களுக்கு ஞாபகம் இருக்கும் குர்பானை அரசு தடை செய்தது என்ற செய்தி எத்தனை பேரை பொங்கி எழச்செய்தது என்று.

அதனால் யார் சொன்னார்கள்? ஏன் இப்போது சொல்கிறார்கள்? இதனால் யாருக்கு லாபம்?" - இந்த மூன்று கேள்விகள் எந்த ஒரு பிரம்மாண்டமான பொய்யையும் உடைத்துவிடும்.

பொய் பரவுவதற்கு 10 நிமிடம் போதும். ஆனால், சிதைக்கப்பட்ட உண்மையை மீட்டெடுக்க 10 நாட்களோ அல்லது 10 ஆண்டுகளோ கூட ஆகலாம். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் அடைந்த மன உளைச்சலில் இருந்து மீள எத்தனை காலம் எடுத்தது.

விழிப்புணர்வே முதல் வெற்றி!
#MediaLiteracy #CounterPropaganda #SocialMediaAwareness #HishamM
See less

Comments