தேங்காயும் தேயிலையும்: சிம்மாசனத்திற்கான யுத்தம்! 🥥☕

8:52 AM Hisham 0 Comments

"இலங்கையின் அடையாளம் எது?" என்று யாராவது கேட்டால், காலம் காலமாக நம்மிடம் இருந்த பதில் 'தேயிலை'. ஆனால், இப்போது தென்னங்கீற்றுகளின் சலசலப்பு அந்தச் சிம்மாசனத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறதா?
சமீபத்திய ஏற்றுமதித் தரவுகள் (Jan-Apr 2026) ஒரு சுவாரஸ்யமான கதையைச் சொல்கின்றன. நமது தேயிலை 451 மில்லியன் டாலர்களை ஈட்டித் தந்து முதலிடத்தில் கம்பீரமாக நிற்கிறது. ஆனால், அதற்குச் சற்றும் சளைக்காமல் தேங்காய் சார்ந்த பொருட்கள் 406 மில்லியன் டாலர்களை அள்ளி வந்து அதன் தோளுக்குப் பின்னால் வந்து நிற்கின்றன.

வெறும் 45 மில்லியன் டாலர்கள் தான் இடைவெளி! ஒருவேளை, மிக விரைவில் தேயிலையைக் கடந்து தேங்காய் முதலிடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உங்களுக்குத் தெரியுமா? கடந்த 2025-ஆம் ஆண்டு நமது தேங்காய் ஏற்றுமதி வரலாற்றில் ஒரு பொற்காலம். அந்த ஆண்டின் முதல் 10 மாதங்களிலேயே தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ($1 Billion) கடந்து சாதனை படைத்தது.
இது ஏதோ தற்செயலாக நடந்த விளைச்சல் உயர்வு மட்டுமல்ல; இது ஒரு 'Structural Shift' எனப்படும் பாரிய கட்டமைப்பு மாற்றம். இன்று உலகச் சந்தையில் தேங்காய் எண்ணெய் (Coconut Oil), தேங்காய் நீர் (Coconut Water) மற்றும் தேங்காய் மாவு (Coconut Flour) ஆகியவற்றுக்கான தேவை தீயாய் கொதிக்கிறது. உலகத்தரம் வாய்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகள் மூலம் இலங்கை அந்தத் தேவையை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
ஆனால், இங்கே நாம் கவனிக்க வேண்டிய நிஜமான செய்தி இதுவல்ல...
இது வெறும் இரண்டு துறைகளுக்கு இடையிலான போட்டி மட்டுமல்ல; இது சரிந்து கிடந்த ஒரு தேசம் மெல்ல நிமிர்ந்து நிற்கும் கதை. 2024-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 5.1 பில்லியன் டாலர்களாக இருந்தது. இன்று, இரண்டே ஆண்டுகளில் அது 5.7 பில்லியன் டாலர்களைத் தொட்டிருக்கிறது.
600 மில்லியன் டாலர் கூடுதல் வருமானம் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. ஆடைத் தொழில் (Apparel), தகவல் தொழில்நுட்பம் (ICT), பெட்ரோலியம், ரப்பர் என எல்லாத் துறைகளும் ஒரே நேர்க்கோட்டில் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
ஒரு நாடு பொருளாதார நெருக்கடியின் இருண்ட பக்கங்களிலிருந்து மீண்டு, வெளிச்சத்தை நோக்கிப் பயணிக்கிறது என்பதற்கு இதைவிடச் சிறந்த சாட்சி வேறென்ன வேண்டும்?
தேங்காய் தேயிலையை முந்துமா என்பதைத் தாண்டி, நம் தேசம் உலகச் சந்தையில் தனது இழந்த பெருமையை மீண்டும் மீட்டெடுக்குமா என்பதே இன்றைய முக்கிய கேள்வி

புதையல் மேல் அமர்ந்திருக்கும் தேசமும்... ஒரு புதிய விடியலும்! 🔋☀️

12:22 AM Hisham 0 Comments

 "தயவுசெய்து உங்கள் வீட்டு சோலார் (Solar) இணைப்பைத் தற்காலிகமாக நிறுத்துங்கள்" –

வார இறுதி நாட்களில் மின்சார சபையிடமிருந்து (CEB) இவ்வாறான ஒரு குறுஞ்செய்தி
Solar பயன்படுத்தும் பலரின் அலைபேசிக்கும் வந்திருக்கலாம்.
அள்ளித் தரும் இயற்கை வளங்களை மடியில் வைத்துக்கொண்டு, அதை எப்படிப் பயன்படுத்துவது
என்று தெரியாமல் ஒரு பெரும் புதையலின் மேல் அமர்ந்திருக்கும் தேசம் நம்முடையது.
ஆண்டு முழுவதும் தாராளமாகக் கிடைக்கும் சூரிய ஒளி நமக்கு ஒரு வரப்பிரசாதம்.
ஆனால், அந்த மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் நவீனக் கட்டமைப்பு நம்மிடம் இதுவரை
இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.


ஏன் இந்த 'Switch Off' குறுஞ்செய்திகள்? 🤯
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பெரும் தொழிற்சாலைகள் இயங்குவதில்லை. அந்த
நேரங்களில் நம் வீடுகளில் உற்பத்தியாகி தேசிய
மின்கட்டமைப்புக்கு (National Grid) பாயும்
அதிகப்படியான மின்சாரத்தைப் பயன்படுத்த ஆளில்லாமல் போய்விடுகிறது.
தேவையற்ற மின்சாரம் திடீரென அதிகரித்தால் ஒட்டுமொத்த
மின்கட்டமைப்பும் பழுதடைந்துவிடும் அபாயம் உண்டு.
இலவசமாகக் கிடைக்கும் சூரிய சக்தியை கூட சேமிக்க வழியில்லாமல், அதை வீணாக்குவதைத்
தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் இதுவரை நாம் இருந்தோம். இடையில் ஒரு
குரங்கு பாய்ந்ததால் மின்தடை ஏற்பட்ட கதையெல்லாம் கூட நாம் கேட்டிருக்கிறோம்.
40 பில்லியன் ரூபாயும்... ஒரு புதிய சகாப்தமும்! 🚀
இந்தத் தொழில்நுட்பத் தேக்கநிலைக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க, ரூ. 40
பில்லியன் மதிப்பிலான மாபெரும் 'பேட்டரி சேமிப்புத் திட்டம்' (BESS)
இப்போது இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
இதன் முதற்கட்டமாக, 20 மெகாவாட் கொள்ளளவு கொண்ட பிரமாண்டமான பேட்டரி தொகுதிகள்
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இது நம் நாட்டின் மின்சக்தி
வரலாற்றில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாக அமையக்கூடும்.
இந்த பேட்டரிகள் என்ன செய்யும்? 🔋💡
பகலில் தாராளமாகக் கிடைக்கும் சூரிய ஒளியில் உற்பத்தியாகும் அதிகப்படியான
மின்சாரத்தை இந்த பேட்டரிகள் தன்னுள் சேமித்துக்கொள்ளும்.
பின்னர், மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கும் இரவு நேரங்களில் (Peak
Hours), சேமிக்கப்பட்ட இந்த சுத்தமான மின்சாரத்தை நமக்கு வழங்கும்.
இதன்மூலம், இரவு நேரங்களில் அதிக விலை கொடுத்து டீசல் அல்லது நிலக்கரி மூலம்
மின்சாரம் தயாரிப்பது பெருமளவு குறையும். இதனால் நாட்டின் பணம்
மிச்சமாகும்; நமக்கும் தடையற்ற, பசுமையான மின்சாரம் கிடைக்கும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் 2015-லேயே எட்டிய இந்த 'Grid-scale Battery'
தொழில்நுட்பத்தை, நாம் இப்போதுதான் எட்டியிருக்கிறோம். கொஞ்சம் தாமதம் என்றாலும்,
உலகத் தொழில்நுட்பத்தோடு இப்போதுதான் நாம் கைகோர்த்திருக்கிறோம்.
காலி மற்றும் மாத்தறையில் ஆரம்பிக்கப்படும் இத்திட்டம், விரைவில் நாடு முழுவதும்
உள்ள 16 பிரதான துணை மின் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

நமது கடல்... ஒரு மாயையும், நங்கூரமிட்ட உண்மையும்! 🚢🌊

5:15 PM Hisham 0 Comments

 "நம்ம நாட்டைச் சுத்தி கடல் இருக்கு, அதனால மீன்களுக்குப் பஞ்சமே இல்லை... நினைச்ச நேரமெல்லாம் வலை விரிச்சு மீன்களை அள்ளிக்கிட்டே இருக்கலாம்" - இப்படித்தான் நம்மில் பலரும் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நிதர்சனம் நாம் நினைப்பது போல அத்தனை அழகானதல்ல.

சமீபத்தில் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றிருந்தபோது, 32 நாட்கள் நீடித்த ஒரு நீண்ட ஆய்வை முடித்துவிட்டு நங்கூரமிட்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான கப்பலைப் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அதன் பெயர் R/V Dr. Fridtjof Nansen. ஐக்கிய நாடுகளின் கொடி பறக்க, கம்பீரமாக நின்றிருந்த அந்த இராட்சத கப்பல் சொன்ன கதைகள் பல.


விந்தையான விஷயம் என்னவென்றால், அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையிலான அந்தப் போர் பதற்றம் மட்டும் இல்லாதிருந்தால், இந்தக் கப்பல் இலங்கை மண்ணிற்கு வந்திருக்கவே வாய்ப்பில்லை. உண்மையில் இது ஓமன் கடலுக்குச் செல்ல வேண்டியது. அங்கே நிலவிய பாதுகாப்பற்ற சூழலால், அதன் திசை மாறி நம் நாட்டிற்கு ஒரு வரப்பிரசாதமாக வந்து சேர்ந்தது.
உலகளவில் சுமார் 90 சதவீத கடல் மீன் வளங்கள் இப்போது 'அளவுக்கு அதிகமாகப் பிடிக்கப்பட்டு' (Over-fished) அல்லது முற்றாக அழிந்து (Depleted) போய்க்கொண்டிருக்கின்றன. நம் கடலடியில் என்ன நடக்கிறது, இன்னும் எவ்வளவு மீன்கள் மிச்சமிருக்கின்றன என்ற எந்தத் தரவுகளும் (Data) நம் அரசாங்கத்திடமும் இல்லை, மக்களாகிய நமக்கும் தெரியாது.
இந்தக் கப்பல் கடந்த 32 நாட்களாக எமது நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) சுற்றித் திரிந்து, மீன் வளம் எங்கே செறிவாக இருக்கிறது, கடல் நீர் எவ்வளவு சூடாகியிருக்கிறது, நாம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) கடலை எந்தளவுக்குக் பாதித்திருக்கிறது என அத்தனையையும் நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கிறது Dr. Fridtjof Nansen கப்பல்.
நோர்வே நாடும், FAO அமைப்பும் இணைந்து சுமார் 1 மில்லியன் டொலர்களை இதற்காகச் செலவிட்டிருக்கிறார்கள். இந்த ஆய்வில் இலங்கை விஞ்ஞானிகளும் பங்கேற்றனர், அதிலும் குறிப்பாகப் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு மிக அதிகம் என்பது நமக்கெல்லாம் பெருமை.
துறைமுகத்தில் நின்று அந்தப் பிரம்மாண்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்றுதான் தோன்றியது... இன்று நம் கண்ணுக்குப் புலப்படாத இந்தத் தரவுகள்தான், நாளை நம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், எமது எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றன.

ஏற்றமிகு இளைஞர் விருதைக் கரங்களில் ஏந்திய தருணம்

4:12 PM Hisham 0 Comments

 சில தருணங்கள் காலத்தின் பக்கங்களில் என்றென்றும் உறைந்துவிடுகின்றன; அந்தப் பிரமாண்டமான மேடையும், பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் நிறுவிய "


ஏற்றமிகு இளைஞர் விருதைக் கரங்களில் ஏந்திய கடந்த ஏப்ரல் 30-ஆம் திகதி வியாழன் மாலையும் அப்படியானதொரு பொக்கிஷமே.

நேர முகாமைத்துவமும், கலையழகும், கட்டுக்கோப்பும் ஒருங்கே கைகோர்க்க, குறித்த நேரத்தில் அவ்வளவு நேர்த்தியாக அரங்கேறியது அகில இலங்கை கம்பன் கழகத்தின் விழா 2026. அங்கே கழகத்து உறுப்பினர்கள் மட்டுமன்றி, கடல்கடந்து அவுஸ்திரேலியா, இலண்டன் எனப் பல தேசங்களிலிருந்தும் வருகை தந்து, என்னை அன்பால் அரவணைத்த உள்ளங்கள் தந்த ஊக்கம் என்னை நிஜமாகவே மெய்சிலிர்க்க வைத்தது.
தமிழ் இலக்கியத்தின் பெருங்கடல், மதிப்பிற்குரிய கம்பவாரிதி ஜெயராஜ் ஐயா அவர்கள் திருவாயிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு சொல்லும் ஆசீர்வாதங்களாய் அமைய, அந்த வாழ்த்து மழையில் திளைத்து நின்றேன். என் குடும்பத்தினரையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்து, அவரின் ஆசிகளைப் பெற்றுக் கொண்ட அந்த நொடிகள், என் வாழ்வில் நான் ஈட்டிய அரும்பெரும் பேறு.
தங்களின் அன்றாடப் பணிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, நான் விருதுபெறும் தருணத்தைக் காண ஓடோடி வந்து வாழ்த்திய அந்தப் பேருள்ளங்களுக்கு என் வார்த்தைகளால் எங்ஙனம் நன்றி நவில்வேன்? இத்தனை பெரியதொரு சபையில், திசையெங்கும் வீற்றிருந்த மாபெரும் சான்றோர்களின், ஆளுமைகளின் அன்பை வென்றெடுத்தமை நான் செய்த பெரும் பாக்கியமே அன்றி வேறில்லை.
இந்தக் காணொளியினூடாக அந்த உன்னதத் தருணத்தை உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவரின் வாழ்விலும் சகல நலன்களையும் வழங்கி அருள்புரிவானாக!
நன்றி!