'தகவல் யுத்தம்' Information War

7:59 PM Hisham 0 Comments

 "உண்மை தனது காலணிகளை அணிந்துகொள்வதற்குள், பொய் உலகையே ஒருமுறை சுற்றி வந்துவிடும்" என்பார்கள். இது இன்று வெறும் பழமொழி அல்ல; நம் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களின் நிதர்சனம்.



இன்றைய அரசியல் என்பது களத்தில் நடக்கும் மோதல் அல்ல; அது உங்கள் அலைபேசித் திரையில் நடக்கும் 'தகவல் யுத்தம்' Information War.

முன்பெல்லாம் ஒரு பொய்யைப் பரப்ப அச்சகங்கள் வேண்டும், தொலைக்காட்சிகள் வேண்டும். இன்று ஒரு WhatsApp Forward அல்லது ஒரு 'Facebook Reel' போதும். அடுத்த பத்து நிமிடங்களில் பல லட்சம் இதயங்களுக்குள் ஒரு நஞ்சை விதைத்துவிட முடியும்.

பொய் என்பது இருட்டில் வளரும் காளான் போன்றது. எங்கே தகவல் வெற்றிடம் இருக்கிறதோ, அங்கே பொய் அரியணை ஏறுகிறது. உதாரணமாக ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்படும்போது, அதன் நன்மைகளைச் சொல்ல உண்மை தடுமாறினால், "இந்தத் திட்டத்தால் உங்கள் சொத்து பறிபோகப் போகிறது" என்று ஒரு பொய் கிளப்பிவிடப்படும். அந்தத் திட்டத்தின் அசல் நோக்கம் உங்களுக்குத் தெரிவதற்கு முன்பே, உங்கள் மனதில் பயம் உட்கார்ந்துவிடும். கோபமும் பயமும் வந்துவிட்டால், மனித மூளையின் தர்க்க ரீதியான பகுதி வேலை செய்வதை நிறுத்திவிடும். இதையே அந்தப் பிரச்சாரப் பீரங்கிகள் விரும்புகின்றன.

உண்மையின் பக்கம் நிற்பவர்களுக்கு Counter-Propaganda கற்றுத்தரும் முதல் பாடம் என்ன தெரியுமா?
ஒரு பொய் முளைக்கும் முன்பே, "அவர்கள் இப்படித்தான் சொல்ல வருவார்கள், ஆனால் உண்மை இதுதான்" என்று முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும். இதுவே இன்றைய காலத்தின் மிகச்சிறந்த தற்காப்பு. இதைத்தான் 'Pre-bunking' என்று செல்வார்கள். அதாவது, நோய்த்தொற்று வந்தபின் சிகிச்சை பெறுவதை விட, அது வராமல் இருக்கத் தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றது.

அதே நேரம் பிரச்சார பீரங்கிகளின் வலையில் சிக்காமல் இருக்க ஒரு செய்தி நம்மை அதீத கோபத்திற்கோ அல்லது பயத்திற்கோ உள்ளாக்கினால், அதை Share செய்வதற்கு முன் ஐந்து நிமிடம் பொறுத்திருக்க வேண்டும். ஏன் என்றால் அந்த உணர்ச்சிதான் பொய்யின் முதலீடு. உங்களுக்கு ஞாபகம் இருக்கும் குர்பானை அரசு தடை செய்தது என்ற செய்தி எத்தனை பேரை பொங்கி எழச்செய்தது என்று.

அதனால் யார் சொன்னார்கள்? ஏன் இப்போது சொல்கிறார்கள்? இதனால் யாருக்கு லாபம்?" - இந்த மூன்று கேள்விகள் எந்த ஒரு பிரம்மாண்டமான பொய்யையும் உடைத்துவிடும்.

பொய் பரவுவதற்கு 10 நிமிடம் போதும். ஆனால், சிதைக்கப்பட்ட உண்மையை மீட்டெடுக்க 10 நாட்களோ அல்லது 10 ஆண்டுகளோ கூட ஆகலாம். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் அடைந்த மன உளைச்சலில் இருந்து மீள எத்தனை காலம் எடுத்தது.

விழிப்புணர்வே முதல் வெற்றி!
#MediaLiteracy #CounterPropaganda #SocialMediaAwareness #HishamM
See less

Comments