நமது கடல்... ஒரு மாயையும், நங்கூரமிட்ட உண்மையும்! 🚢🌊

5:15 PM Hisham 0 Comments

 "நம்ம நாட்டைச் சுத்தி கடல் இருக்கு, அதனால மீன்களுக்குப் பஞ்சமே இல்லை... நினைச்ச நேரமெல்லாம் வலை விரிச்சு மீன்களை அள்ளிக்கிட்டே இருக்கலாம்" - இப்படித்தான் நம்மில் பலரும் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நிதர்சனம் நாம் நினைப்பது போல அத்தனை அழகானதல்ல.

சமீபத்தில் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றிருந்தபோது, 32 நாட்கள் நீடித்த ஒரு நீண்ட ஆய்வை முடித்துவிட்டு நங்கூரமிட்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான கப்பலைப் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அதன் பெயர் R/V Dr. Fridtjof Nansen. ஐக்கிய நாடுகளின் கொடி பறக்க, கம்பீரமாக நின்றிருந்த அந்த இராட்சத கப்பல் சொன்ன கதைகள் பல.


விந்தையான விஷயம் என்னவென்றால், அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையிலான அந்தப் போர் பதற்றம் மட்டும் இல்லாதிருந்தால், இந்தக் கப்பல் இலங்கை மண்ணிற்கு வந்திருக்கவே வாய்ப்பில்லை. உண்மையில் இது ஓமன் கடலுக்குச் செல்ல வேண்டியது. அங்கே நிலவிய பாதுகாப்பற்ற சூழலால், அதன் திசை மாறி நம் நாட்டிற்கு ஒரு வரப்பிரசாதமாக வந்து சேர்ந்தது.
உலகளவில் சுமார் 90 சதவீத கடல் மீன் வளங்கள் இப்போது 'அளவுக்கு அதிகமாகப் பிடிக்கப்பட்டு' (Over-fished) அல்லது முற்றாக அழிந்து (Depleted) போய்க்கொண்டிருக்கின்றன. நம் கடலடியில் என்ன நடக்கிறது, இன்னும் எவ்வளவு மீன்கள் மிச்சமிருக்கின்றன என்ற எந்தத் தரவுகளும் (Data) நம் அரசாங்கத்திடமும் இல்லை, மக்களாகிய நமக்கும் தெரியாது.
இந்தக் கப்பல் கடந்த 32 நாட்களாக எமது நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) சுற்றித் திரிந்து, மீன் வளம் எங்கே செறிவாக இருக்கிறது, கடல் நீர் எவ்வளவு சூடாகியிருக்கிறது, நாம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) கடலை எந்தளவுக்குக் பாதித்திருக்கிறது என அத்தனையையும் நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கிறது Dr. Fridtjof Nansen கப்பல்.
நோர்வே நாடும், FAO அமைப்பும் இணைந்து சுமார் 1 மில்லியன் டொலர்களை இதற்காகச் செலவிட்டிருக்கிறார்கள். இந்த ஆய்வில் இலங்கை விஞ்ஞானிகளும் பங்கேற்றனர், அதிலும் குறிப்பாகப் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு மிக அதிகம் என்பது நமக்கெல்லாம் பெருமை.
துறைமுகத்தில் நின்று அந்தப் பிரம்மாண்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்றுதான் தோன்றியது... இன்று நம் கண்ணுக்குப் புலப்படாத இந்தத் தரவுகள்தான், நாளை நம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், எமது எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றன.