ஏற்றமிகு இளைஞர் விருதைக் கரங்களில் ஏந்திய தருணம்

4:12 PM Hisham 0 Comments

 சில தருணங்கள் காலத்தின் பக்கங்களில் என்றென்றும் உறைந்துவிடுகின்றன; அந்தப் பிரமாண்டமான மேடையும், பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் நிறுவிய "


ஏற்றமிகு இளைஞர் விருதைக் கரங்களில் ஏந்திய கடந்த ஏப்ரல் 30-ஆம் திகதி வியாழன் மாலையும் அப்படியானதொரு பொக்கிஷமே.

நேர முகாமைத்துவமும், கலையழகும், கட்டுக்கோப்பும் ஒருங்கே கைகோர்க்க, குறித்த நேரத்தில் அவ்வளவு நேர்த்தியாக அரங்கேறியது அகில இலங்கை கம்பன் கழகத்தின் விழா 2026. அங்கே கழகத்து உறுப்பினர்கள் மட்டுமன்றி, கடல்கடந்து அவுஸ்திரேலியா, இலண்டன் எனப் பல தேசங்களிலிருந்தும் வருகை தந்து, என்னை அன்பால் அரவணைத்த உள்ளங்கள் தந்த ஊக்கம் என்னை நிஜமாகவே மெய்சிலிர்க்க வைத்தது.
தமிழ் இலக்கியத்தின் பெருங்கடல், மதிப்பிற்குரிய கம்பவாரிதி ஜெயராஜ் ஐயா அவர்கள் திருவாயிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு சொல்லும் ஆசீர்வாதங்களாய் அமைய, அந்த வாழ்த்து மழையில் திளைத்து நின்றேன். என் குடும்பத்தினரையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்து, அவரின் ஆசிகளைப் பெற்றுக் கொண்ட அந்த நொடிகள், என் வாழ்வில் நான் ஈட்டிய அரும்பெரும் பேறு.
தங்களின் அன்றாடப் பணிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, நான் விருதுபெறும் தருணத்தைக் காண ஓடோடி வந்து வாழ்த்திய அந்தப் பேருள்ளங்களுக்கு என் வார்த்தைகளால் எங்ஙனம் நன்றி நவில்வேன்? இத்தனை பெரியதொரு சபையில், திசையெங்கும் வீற்றிருந்த மாபெரும் சான்றோர்களின், ஆளுமைகளின் அன்பை வென்றெடுத்தமை நான் செய்த பெரும் பாக்கியமே அன்றி வேறில்லை.
இந்தக் காணொளியினூடாக அந்த உன்னதத் தருணத்தை உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவரின் வாழ்விலும் சகல நலன்களையும் வழங்கி அருள்புரிவானாக!
நன்றி!